நூபுர் ஷர்மா: முகமது நபி பற்றிய சர்ச்சையில் நரேந்திர மோதியின் மௌனம் தற்செயலானது அல்ல: ஹமித் அன்சாரி
முகமது நபி குறித்த பாஜக செய்தி தொடர்பாளர்களின் கருத்து தொடர்பான பிரதமர் நரேந்திரமோதியின் மௌனம் தற்செயலானது அல்ல, அதில் அர்த்தமுள்ளது என்று முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமித் அன்சாரி பிபிசி ஹிந்திக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
"பிரதமரின் மௌனத்துக்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று முகமது பற்றிய பாஜக செய்தித் தொடர்பாளர்களின் கருத்தை அவர் நிராகரிக்கவில்லை. அல்லது ஏற்றுக் கொள்கிறார். இரண்டுமே தவறுதான்" என்று ஹமித் அன்சாரி கூறியுள்ளார்.
முகமது நபிகள் குறித்து பாரதிய ஜனதா செய்தித் தொடர்பாளர்களாக இருந்தவர்கள் தெரிவித்த சர்ச்சை கருத்துகள் காரணமாக இந்தியாவுக்கு ராஜரீதியாக பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
கத்தார், சவுதி அரேபியா, குவைத், ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், இந்தோனீசியா, இராக், மாலத்தீவுகள், ஜோர்டான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் தங்கள் நாடுகளில் உள்ள இந்திய தூதர்களை அழைத்து எதிர்ப்பை பதிவு செய்திருந்தன.
- இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு செல்வாக்கு மிக்கதா கத்தார்?
- நூபுர் ஷர்மா விவகாரம்: கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள இந்தியா; இஸ்லாமிய நாடுகளுடனான உறவில் பாதிப்பா?
இந்த விவகாரம் குறித்து பிபிசி ஹிந்தியின் இக்பால் அகமதுவுக்கு ஹமித் அன்சாரி பேட்டியளித்தார். அதன் விவரம்.
கேள்வி: முகமது நபி பற்றி இரண்டு பாஜக செய்தித் தொடர்பாளர்கள் கூறிய கருத்துக்கு இந்தியா மன்னிப்புக் கோர வேண்டும் என்று கத்தார் கேட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இதுகுறித்து இருவேறு கருத்துகள் இருக்கின்றன. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
பதில்: இரண்டு விஷயங்கள் உள்ளன. நபிகள் நாயகத்தைப் பற்றி இப்படிக் கூறியவர்கள் சாதாரணமானவர்கள் என்று கூறுவது சரியல்ல. அவர்கள் ஆளுங்கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களாக இருந்தனர்.
ஆனால் முக்கியமானது என்னவென்றால், இது ஒரேயொரு கூற்றை மட்டும் பற்றியது அல்ல. கடந்த சில மாதங்களில் இது போன்ற பல கருத்துகள் கூறப்பட்டிருக்கின்றன.
பல்வேறு தர்ம சன்சத் கூட்டங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான, முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் இடம்பெற்றிருக்கின்றன. சொற்கள் வேண்டுமானால் வெவ்வேறாக இருக்கலாம். அப்போதெல்லாம் அரசாங்கம் முற்றிலும் மவுனமாக இருந்தது. ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அது அர்த்தமேயில்லாமல் தாமதாக எடுக்கப்பட்டது.
எனவே இது திடீரென்று நடந்துவிடவில்லை. இது சில காலமாகவே உருவாகி வந்திருக்கிறது. எதையும் ஒப்புக்கொள்வதில்லை என்ற கொள்கையைக் கொண்டிருப்பதால் அரசு இதைப் பொறுத்துக் கொண்டிருக்கிறது.
கேள்வி: அப்படியானால் இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டுமா? தேவையில்லையா?
பதில்: இந்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் ராஜீய உறவுகளில் இரு நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகளைக் கையாள பல வழிமுறைகள் உள்ளன. சில சமயம் வெளியுறவு அமைச்சர், சில சமயம் பிரதமர் சத்தமின்றி தொலைபேசியில் தொடர்புடைய நாடுகளுடன் பேசிவிடுகிறார்கள். இப்போது இந்த நாடுகளில் ஏதாவது ஒன்றில் நான் தூதராக நியமிக்கப்பட்டிருந்தால், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரச்சினையைத் தீர்க்கும்படி எனது தலைவர்களைக் கேட்டுக் கொண்டிருப்பேன்.
கேள்வி: பிரதமரோ அல்லது மத்திய அமைச்சர்களோ எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பது ஏன்?
பதில்: பிரதமர், உள்துறை அமைச்சர், வெளியுறவு அமைச்சர் ஆகியோர் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர்கள் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். பிரதமர் மோதி அனைத்து வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் சிறந்த உறவைக் கொண்டுள்ளார். ஆனால் அவரது மௌனம் மிகவும் அர்த்தமுள்ளதாகவே இருக்கிறது, அது தற்செயலானது அல்ல.
அதை இரண்டு விதமாக விளக்கலாம். முதலாவதாக, பாஜக செய்தித் தொடர்பாளர் கூறியதை பிரதமர் நிராகரிக்கவில்லை என்று கூறலாம் அல்லது அதை பிரதமர் ஏற்றுக்கொள்கிறார் என்றும் கூறலாம்.
கேள்வி: சீனாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடப்பதாகக் கூறப்படும் அத்துமீறல்கள் அல்லது பாகிஸ்தானில் உள்ள அஹ்மதியாக்கள் மற்றும் ஷியா முஸ்லிம்கள் நடத்தப்படும் முறைகள் பற்றி இஸ்லாமிய நாடுகள் ஏன் எதுவும் கூறுவதில்லை?
பதில்: இந்த இஸ்லாமிய நாடுகள் ஏன் சீனாவைப் பற்றி எதுவும் கூறவில்லை, இது ஒரு நியாயமான கேள்வி, அவர்களைக் கேட்க வேண்டும். அவர்கள் ஏன் நம் நாட்டைப் பற்றி பேசினார்கள் என்பதையும் அவர்களிடம் கேட்க வேண்டும். ஆனால் விஷயம் என்னவென்றால், இந்த விஷயம் மிகவும் உணர்ச்சி மிக்கது. அவர்கள் இதைப்ப் பார்த்து அமைதியாக இருக்க முடியாது. இந்த பிரச்சினையில் அந்நாட்டு மக்கள் கோபப்படுகிறார்கள்.
கேள்வி: இது நாடுகடந்த இஸ்லாமிய ஒருங்கிணைப்புக்கு வழிவகுக்குமா?
பதில்: நாம் இங்கு வாழ்கிறோம், இது நமது நாடு, நமது உரிமைகள் இங்குதான் உள்ளன. இந்திய முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இங்கு வாழ்கிறார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய முஸ்லிம்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடுவதற்கு வெளிநாடுகளின் உதவியைப் பற்றி ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அவர்களாகவே உரிமைகளைப் பெறுகிறார்கள், சில நேரங்களில் கிடைப்பதில்லை. நான் ஒரு இந்தியக் குடிமகன்; இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான் எனக்கு மதப் புத்தகம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்