“அந்தக் கட்சியை விட ஆம் ஆத்மி எவ்வளவோ பெட்டர்” - எந்தப் பக்கம் தாவ திட்டமிடுகிறார் ஹர்திக் படேல்?
அகமதாபாத் : காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் விலகிய ஹர்திக் படேல், பாஜகவில் இணைவீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு அது ஒரு ஆப்ஷனாக ஏன் இருக்கக்கூடாது? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால், ஹர்திக் படேல் விரைவில் பாஜகவில் இணைவார் என்று கூறப்படுகிறது. ஹர்திக் படேல் ஏற்கனவே மோடி ஆட்சியைப் பாராட்டிப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தில் செல்வாக்கு மிக்க தலைவராகக் கருதப்படும் ஹர்திக் படேல், பாஜகவில் இணைவது அக்கட்சியின் பலத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுங்கட்சியினருக்கு குடைச்சல்? காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது கடும் கோபத்தில் திமுகவினர்.. இதுதான் காரணமா?
ஹர்திக் படேல் விலகல்
கடந்த 2015-ஆம் ஆண்டு குஜராத்தில் பட்டிதார் சமூக இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ஹர்திக் படேல், 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸில் சேர்ந்தார். அவர் குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால், கட்சியில் உள்ளவர்களால் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து கூறி வந்த ஹர்திக் படேல் கடந்த 18ஆம் தேதியன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
பாஜகவில் இணைவாரா
காங்கிரஸில் இருந்து விலகிய ஹர்திக் படேல் பாஜகவுக்கு செல்வாரா என்பதுதான் விவாதமாக உருவெடுத்துள்ளது. குஜராத் தேர்தலில் பா.ஜ.க ஏழாவது முறையாக வெற்றி பெறும் என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளார் ஹர்திக் படேல். அதேபோல, மோடியையும், மோடி ஆட்சியையும் புகழ்ந்திருக்கிறார் ஹர்திக் படேல். இதனால் அவர் பாஜகவில் இணைவார் என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.
பாஜக ஒரு ஆப்ஷன்
இந்நிலையில், பா.ஜ.கவில் இணைவீர்களா என்று செய்தியாளர்கள் ஹர்திக் படேலிடம் கேட்டதற்கு, "இப்போதைக்கு உறுதியாக எந்தத் திட்டமும் இல்லை. தேர்தல் வரும்போது நான் ஒரு முக்கிய பாத்திரமாக இருப்பேன். எனது நண்பர்கள், நலம் விரும்பிகளுடன் ஆலோசித்து மக்களுக்கு நலன் பயக்கும் நல்ல முடிவை எட்டுவேன். பாஜக ஏன் ஒரு ஆப்ஷனாக இருக்கக்கூடாது?" எனத் தெரிவித்துள்ளார்.
வழக்கு வாபஸ் பெறப்படுமா
ஒருவேளை பா.ஜ.கவில் இணைந்தால் 2015ல் பதியப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுமாறு கோருவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஹர்திக் படேல், என் மீதான வழக்கிற்காக பேசமாட்டேன். ஆனால் என்னோடு சேர்த்து நிறைய பட்டிதார் சமூக இளைஞர்கள் மீது வழக்கு பாய்ந்தது. அவர்களுக்காக குரல் கொடுப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸை விட சிறந்தது ஆம் ஆத்மி
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அப்போதே அடுத்த இலக்கு குஜராத் என்று அர்விந்த் கேஜ்ரிவால் கூறியிருந்தார். இந்நிலையில், ஹர்திக் படேலும், "ஆம் ஆத்மியின் தேர்தல் உத்திகள் காங்கிரஸை விட சிறந்தவை" எனத் தெரிவித்திருக்கிறார். குஜராத்தை சேர்ந்த ஹர்திக் படேல் ஆம் ஆத்மியில் இணைவதற்கும் வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.