'2ஆம் அலை.. ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை.. ஒருவர்கூட உயிரிழக்கவில்லை..' ஹரியானா பாஜக அரசு திட்டவட்டம்
சண்டிகர்: கொரோனா 2ஆம் அலை சமயத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மாநிலத்தில் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை என்று ஹரியானா பாஜக அரசு சட்டசபையில் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பின.
தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டியது. அதேபோல தினசரி கொரோனா உயிரிழப்புகளும் நான்காயிரத்தைத் தாண்டியது.

2ஆம் அலை
இந்த நிலையால் நாட்டிலுள்ள சுகாதார உள்கட்டமைப்பு கடுமையான நெருக்கடியைச் சந்தித்தது. ஒரு புறம் கொரோனா பாதிப்பாலும் மறுபுறம் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டன. டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களில் ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் எந்தளவு திண்டாடினார்கள் என்பதை அனைவரும் பார்த்திருந்தோம். நிலைமை சீராகவே பல வாரங்கள் வரை ஆனது.

ஆக்சிஜன் பற்றாக்குறை
நாட்டின் சில மாநிலங்களில் மிக மோசமான நிலை ஏற்பட்டது. கொரோனா படுக்கையாகவே பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. சில இடங்களில் ஆக்சிஜன் இல்லை என்பதால் நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்குச் செல்லும்படி மருத்துவமனை நிர்வாகங்களே வலியுறுத்தின. டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அங்குள்ள மருத்துவமனைகள் தொடர்ந்து SOS அனுப்பின. மேலும், டெல்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருந்தது.

மத்திய அரசு
இந்தச் சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன், நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மத்திய அரசின் இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள் குறித்து தரவுகளை அனுப்புமாறு மாநில அரசுகளிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டது,

உயிரிழப்பு இல்லை
இந்நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான ஹரியானாவில் கடந்த மார்ச் முதல் ஜூலை வரை மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்று அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். பற்றாக்குறையால் மாநிலத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார். ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டாரும் இதே பதிலை அளித்துள்ளார்.

ஹரியானா அரசு
கொரோனா 2ஆம் அலை ஏற்பட்ட சமயத்தில் மாநிலத்தில் ஆக்சிஜன் தேவை 350 மெட்ரிக் டன் வரை அதிகரித்ததாகவும், அதற்கேற்ப மத்திய அரசு அதிகளவில் ஆக்சிஜனை ஒதுக்கீடு செய்ததாகவும் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார். ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்க உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், உயிரிழப்புகள் தடுக்கப்பட்டதாகவும் முதல்வர் தெரிவித்தார்,

காங்கிரஸ் விமர்சனம்
இருப்பினும் மனோகர் லால் கட்டாரின் கருத்து ஹரியான மாநில காங்கிரஸ் மறுத்துள்ளது. ஆக்சிஜன் மரணங்கள் குறித்து முதல்வர் பொய்யான தகவல்களை அளித்துள்ளதாக விமர்சித்துள்ள அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேந்தர் சிங் ஹூடா, ஆக்சிஜன் மரணங்கள் குறித்துக் கண்டறியச் சிறப்புக் குழு அமைக்க வேண்டும் என்றும் உண்மையான நிலையைக் கண்டறிந்தால் மட்டுமே 3ஆம் அலையைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications