5 ஆண்டுகளில் 335 நாட்கள் மட்டுமே நடந்த 15வது லோக்சபா...
டெல்லி: 15வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடர் 21.02.2014 வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், நிலக்கரிச் சுரங்க முறைகேடு, தனித் தெலங்கானா கோரிக்கை உள்ளிட்ட விவகாரங்களால் ஏற்பட்ட அமளிகளின் காரணமாக நாடாளுமன்ற அலுவல்கள் பல நாள்கள் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டன.
2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகாலத்தில் 335 நாட்கள் வேலை நாட்களாக இருந்தன. மொத்தம் 1,331 மணி நேரம் லோக்சபா நடந்துள்ளது.
ஆனால், 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆண்டு வரை ஆயிரத்து 736 மணி நேரம் நடந்துள்ளது.
கூச்சல் குழப்பம்
கடந்த கூட்டத்தொடர் வரை நாடாளுமன்றம் செயல்பட்ட மொத்த நேரத்தில் 36 சதவீதம் கூச்சல் குழப்பத்தால் வீணாகியுள்ளன.
165 மசோதாக்கள் நிறைவேற்றம்
இந்த கூட்டத்தொடரை தவிர்த்து 2009ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 165 மசோதாக்கள் நிறைவேறியுள்ளன.
நிறைவேறாத மசோதாக்கள்
72 மசோதாக்கள் நிறைவேறாத மசோதாக்களாகவும், 126 மசோதாக்கள் நிலுவையிலும் உள்ளன. இதில் 95 சதவீத பட்ஜெட் செலவினங்கள் விவாதங்கள் இல்லாமல் நிறைவேற்றப்பட்டன.
முதல் பெண் சபா நாயகர்
15வது லோக்சபாவின் சபாநாயகர் மீராகுமார், நாட்டின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமை பெற்றவர். கடைசி நாளில் உரையாற்றிய அவர், கடந்த 2009 ஜுன் 3ஆம் தேதி 15வது லோக்சபாவின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட தருணம் மகிழ்ச்சியான தருணம் என்றார்.
எனக்கு பெருமை
சபாநாயகராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது பெருமையான தருணம். அதன் மூலம் நாட்டின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமை எனக்கு கிடைத்திருக்கிறது. லோக்சபா கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டு, சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது என்று கூறினார் சபாநாயகர் மீராகுமார்.
வழியனுப்பு விழா
தற்போது முடிவடைந்த கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தி 15-வது மக்களவையின் கடைசி தினத்தன்று உறுப்பினர்களின் வழியனுப்பு விழாவை நடத்தலாம் என்று லோக்சபா தலைவர் மீரா குமார் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், தெலுங்கானா விவகாரத்தில் 13நாள் நடைபெற்ற கூட்டத் தொடரும் அமளியின் அடையாளமாகவே முடிவடைந்ததால், வழியனுப்பு விழாவும் நடைபெறாமல் அமளியின் விழாவே மிஞ்சியது.
நிமிடத்திற்கு 2.50 லட்சம் செலவு
நாடாளுமன்ற வரவு செலவு கணக்குப்படி இரு அவைகளையும் நடத்த 1 நிமிடத்திற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
600 நாட்கள்
1952ம் ஆண்டு முதல் 1967 ம் ஆண்டுவரை லோக்சபா 600 நாட்களுக்கு மேல் அதாவது 3,700 மணி நேரங்களுக்கு மேல்வரை நடைபெற்றுள்ளது.
மோசமான லோக்சபா
15வது லோக்சபா நிகழ்வுகள்தான் மிகவும் மோசமானதாக இருந்தது என்று வர்ணிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.