ஹத்ராஸ் படுகொலை: ஆறுதல் கூறாமல் உ.பி அரசு அடக்குமுறைகளை கையாளுவதா? - ஜோதிமணி எம்பி
ஹத்ராஸ் இளம்பெண் படுகொலை சம்பவத்தில் உத்தரபிரதேச அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தராமல் அடக்குமுறைகளை கையாளுவதாக ஜோதிமணி எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.
நொய்டா: ஹத்ராஸ் இளம்பெண் படுகொலை சம்பவத்தில் உத்தரபிரதேச மாநில அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தராமல் அடக்குமுறைகளை கையாளுவதாக கரூர் எம்பி ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார். நீதி கிடைக்கும் வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என்றும் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான ஒரு தலித் இளம்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்து உடலை சிதைத்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த இளம் பெண் உயிரிழந்ததை அடுத்து போலீசார் அவசர அவசரமாக தகனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த படுகொலை சம்பவம் உத்தரபிரதேசம் மட்டுமின்றி, நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் பல இடங்களில் போராட்டம் வெடித்ததால் ஹத்ராஸ் செல்ல தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் கடந்த வியாழக்கிழமை தடையை மீறி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரசார், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் கூற ஹத்ராஸ் செல்ல முயன்றனர்.
இருவரும் சாலையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். தடையை மீறி நடந்து சென்றவர்களை கவால்துறையினர் தடுத்து நிறுத்தினர் அப்போது அங்கு பதற்றம் ஏற்பட்டது. காவல்துறையினர் பிடித்து தள்ள அதை மீறி காங்கிரஸ் கட்சியினர் நடந்து சென்றனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் தடுமாறிய ராகுல் கீழே விழுந்தார். காவல்துறையினர் தன்னை தாக்கியதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் தொண்டர்கள் vs காவல்துறை.. தண்ணீர் பீச்சும் வாகனங்கள்.. போர்க் களமான டெல்லி பார்டர்
தள்ளிவிட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்காமல் கொரோனா காலத்தில் விதிமுறைகளை மீறி போராட்டம் நடத்தியதாக ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், மகாத்மா காந்தியின் பிறந்த நாளான நேற்று, ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த உலகத்தில் யாருக்கும் நான் பயப்பட மாட்டேன். எந்த ஒரு அநீதியான செயலுக்கும் தலைவணங்க மாட்டேன். உண்மையின் சக்தியைக் கொண்டு பொய்யை தோற்கடிப்பேன். பொய்க்கு எதிரான போரில் அனைத்து தடைகளையும் எதிர்கொள்வேன். காந்தி பிறந்த நாளில் இதயபூர்வமான வாழ்த்துகள் என்று பதிவிட்டார்.
காவல்துறையினர் தள்ளிவிட்ட பதற்றம் உருவான நிலையில் இன்று காங்கிரஸ் எம்பிக்களுடன் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக மீண்டும் ஹத்ராஸ்க்கு காரில் பயணம் செய்துள்ளார் ராகுல்காந்தி. அவருடன் பிரியங்கா காந்தியும் செல்கிறார்.
கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் பேருந்து மூலம் ஹத்ராஸ்க்கு பயணம் மேற்கொண்டனர். காங்கிரஸ் கட்சியினர் வருவதை தடுக்க உத்தரபிரதேச எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது. நொய்டா சாலையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
ஹத்ராஸ்க்கு எம்பிக்களுடன் பேருந்து மூலம் பயணம் செய்யும் எம்பி ஜோதிமணி தொலைபேசி மூலம் நமக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், உத்தரபிரதேச அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தராமல் அடக்குமுறைகளை கையாளுவதாக குற்றம் சாட்டினார். நீதி கிடைக்கும் வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என்றும் தெரிவித்துள்ளார்.