தமிழகத்தில் இவ்வளவு பேருக்கு டெங்கு காய்ச்சலா?.. பீதி கிளப்பும் மத்திய அரசின் புள்ளி விவரம்!
தமிழகத்தில் கடந்த 7 மாதத்தில் 5 ஆயிரத்து 474 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு களைவிட, இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரித்துள்ளது. பெரும்பாலும் மழைக் காலங்களில்தான் அதிகம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே டெங்குவின் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. கடந்த 7 மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 5 ஆயிரத்து 474 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரிய வந்துள்ளது.
2017ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் ஜூலை 30-ம் தேதி வரையிலான 7 மாதத்தில் தமிழகத்தில் மட்டுமே 5,474 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இறப்பு விகிதம் என்பது குறைந்துள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்டு ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது.

கேரளா ஃபர்ஸ்ட், தமிழகம் இரண்டாமிடம்
நாடு முழுவதும் மொத்தம் 28 ஆயிரத்து 792 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 46 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றனர். அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 13 ஆயிரத்து 913 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 23 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவிற்கு அடுத்தபடியாக டெங்குவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம் வகிக்கிறது.

காலநிலைக்கு ஏற்ப மாறும் ஏடிஸ் கொசு
டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் முதலில் மழைக்காலத்தில் மட்டுமே உற்பத்தியாகின. அதனால் மழைக் காலத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருந்தது. தற்போது அந்தக் கொசுக்கள் மழை, குளிர் மற்றும் கோடைக்காலத்தில் வாழ்வதற்கு ஏற்ப தங்களை மாற்றி கொண்டுள்ளன.
அதனால்தான் கோடைக்காலத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பொதுவாக கொசுக்களின் வாழ் நாள் 20 நாட்களாக இருந்தது. ஆனால், தற்போது அது 40 நாட்களாக அதிகரித்துள்ளது.
|
எங்கே உற்பத்தியாகிறது
சிறிய பொருட்களில் தேங்கி யிருக்கும் சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகி வந்த ஏடிஸ் கொசுக்கள், தற்போது பெரிய பொருட்கள், தண்ணீர் தொட்டி போன்றவற்றில் உற்பத்தியாகி வருகிறது. மலேரியாவை பரப்பும் அனபிலஸ் கொசுக்களை விரட்டிவிட்டு, அந்த இடங்களை ஏடிஸ் கொசுக்கள் ஆக்கிரமித்து வருகின்றன.

ஆண்டு முழுவதும் நடவடிக்கை தேவை
இதனால் மலேரியா பாதிப்பு குறைந்து, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மழைக்காலத்தில் மட்டும் எடுக்காமல், ஆண்டு முழுவதும் தமிழக அரசு எடுக்க வேண்டும். அப்போதுதான் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்.












Click it and Unblock the Notifications