1971- போரை விட கடுமையாக உள்ளது இப்போதைய சண்டை! - ராணுவ அதிகாரி
ஜம்மு: 1971-ம் ஆண்டு நடந்த இந்திய - பாகிஸ்தான் போரை விட மிகக் கடுமையாக உள்ளது இப்போதைய எல்லைச் சண்டை என்று தெரிவித்துள்ளார் இந்திய எல்லை பாதுகாப்பு படையின் தலைவர் டி.கே.பதாக்.
கடந்த 2 வாரங்களாக ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வீச்சு நடத்தி வருகிறது. அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது இந்திய ராணுவம்.
இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடந்து வரும் சண்டையில் இதுவரை 3 இந்திய ராணுவ வீரர்கள், 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் பலியாகியுள்ளனர். 15-க்கும் மேற்பட்ட வீரர்கள் குண்டு துளைத்து காயமடைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.புரா உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாகிஸ்தான் கடுமையான துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வீசி வைத்து தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பதற்றம் காரணமாக சுமார் 3000 பேர் வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து பேட்டியளித்த இந்திய எல்லை பாதுகாப்பு படையின் தலைவர் டி.கே.பதாக், "தற்போது எல்லையில் நடந்து வரும் சண்டை மிக கடினமாக உள்ளது. கடந்த 1971-ல் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போருக்கு பிறகு இதுபோன்ற ஒரு சண்டையை நான் பார்க்கவில்லை," என்று தெரிவித்தார்.