திருப்பதியில் கனமழை: ஏழுமலையான் கோவிலுக்குள் வெள்ளநீர் புகுந்தது- பக்தர்கள் தவிப்பு
திருப்பதி: திருப்பதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கன மழையினால் ஏழுமலையான் கோவிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது. தீயணைப்பு துறையினர் உதவியுடன் கோவிலுக்குள் புகுந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது. திருப்பதி மலைப்பாதையின் பல இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் விழுந்தன. இதனால் பக்தர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்களின் வருகையும் வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
திருப்பதியில் பெய்து வரும் பலத்த மழையால் வெள்ளநீர் கோவிலுக்குள் புகுந்துவிட்டதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். தீயணைப்புத்துறையினர் உதவியுடன் கோவிலுக்குள் புகுந்த மழைநீர் வெளியேற்றப்பட்டது.
கனமழை நீடிப்பதால் 2வது மலை பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து தடைபட்டது. பக்தர்கள் பாதுகாப்பு கருதி 2வது மலை பாதை சில கிலோ மீட்டர் தூரம் மூடப்பட்டு போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது.
பக்தர்கள் நடந்து செல்லும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையிலும் பாறைகள் உருண்டு விழுந்ததால் அந்த பாதையும் மூடப்பட்டது. சீரமைப்பு பணிகள் முடிந்ததை அடுத்து, திருப்பதி மலை நடைபாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே, திருப்பதி உள்ளிட்ட ஆந்திராவின் பல பகுதிகளில் கனமழை தொடருகிறது. இதனால், திருப்பதி ஏழுமலையான கோவிலில் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
திருப்பதி மலைக்கு நடந்து சென்ற பக்தர்கள் கடும் குளிர் காரணமாக சிரமத்திற்கு உள்ளாயினர். மலையின் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை தொடர்ந்து பொழிவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது.
இந்நிலையில் திருப்பதி அருகே உள்ள கல்யாணி நீர் தேக்கம் சுமார் 20ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. இதனை தொடர்ந்து அணையிலிருந்து உபரி நீர் இரண்டு மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது.