உத்தரகண்ட் மாநிலத்தில் நீடிக்கும் கனமழை: புனித யாத்திரை நிறுத்தம்
கேதார்நாத்: உத்தர்காண்ட் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக பத்ரிநாத்தில் 350க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், யாத்திகர்கள் யாரும் வெளியே வர முடியாமல் ஒரு சில இடங்களில் தங்கியுள்ளனர். பத்ரிநாத்தில 50 பக்தர்களும், ஷமோலியில் 300 பேரும் தங்கியுள்ளனர்.
கனமழை காரணமாக கேதாரநாத் யாத்திரை இரு தினங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கேதாரநாத் யாத்திரையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழை காரணமாக பத்ரிநாத் யாத்திரையும், ஷார்தாம் யாத்திரையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கங்கோத்ரியின் கோமுக் பகுதியில் யோகா குரு ராம்தேவ் மற்றும் அவருடன் 450 மாணவர்கள் சிக்கி தவித்து வருவகின்றனர்.
கடந்த ஆண்டு இதே காலத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கனமழை வெள்ளப்பெருக்கினால் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.