இமாச்சலில் அடுத்த முதல்வர் யார்? தேர்தல் முடிவுக்கு முன்பே டெல்லி பறந்த காங் தலைவர்கள்.. என்னாச்சு?
சிம்லா: இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே அம்மாநிலத்தின் அடுத்த முதல்வராக தன்னை தேர்ந்தெடுக்கக் கோரி மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் டெல்லியில் முகாமிட தொடங்கியுள்ளனர்.
இதை பார்த்த பாஜகவினர், "தேர்தல் முடிவே இன்னும் வெளியாகவில்லை; அதற்குள் முதல்வர் பதவிக்கு போட்டியா.. உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லையா" என சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.
ஆனால், இதை பற்றி எல்லாம் கவலைப்படாத இமாச்சல் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லிக்கு பறப்பதும், மீண்டும் வருவதுமாக பரபரப்பாக இயங்கி வருகின்றனர்.

பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி..
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆட்சியை மீண்டும் தக்க வைக்கும் முனைப்பில் பாஜகவும், ஆட்சிக் கட்டிலை கைப்பற்றும் முயற்சியில் காங்கிரஸும் அங்கு கடுமையாக மோதிக் கொண்டன. இந்தத் தேர்தலை பொறுத்தவரை பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே சரிக்கு சமமான போட்டி இருக்கும் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸார் கொண்டாட்டம்..
அதே சமயத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையில் இமாச்சல் சட்டமன்றத் தேர்தலில் இந்த முறை அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. வழக்கமாக, ஆட்சியில் இருக்கும் கட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் இருந்தால் இதுபோல அதிக வாக்குகள் பதிவாகும் என்பது தேர்தல் கணக்கு. எனவே, இதைக் கருத்தில்கொண்டு இந்த முறை தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என காங்கிரஸார் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லிக்கு மூத்த தலைவர் 'விசிட்'..
இந்தக் கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் இமாச்சலப் பிரதேச மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் முதல்வர் பதவியை தனக்கு வழங்கக் கோரி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். தற்போது இமாச்சல் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் முகேஷ் அக்னிஹோத்ரி, மூத்த தலைவர் சுக்வீந்தர் சிங், இமாச்சல் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரதீபா சிங் உள்ளிட்ட தலைவர்கள் இதில் அடங்குவர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை இவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர்.

கலாய்க்கும் பாஜக..
இந்நிலையில், இமாச்சல் காங்கிரஸாரின் இந்த நடவடிக்கையை கண்டு பாஜகவினர் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். "தேர்தல் முடிவுகளே இன்னும் வெளியாகவில்லை, அதற்குள் முதல்வர் பதவிக்கு போட்டியா.. காங்கிரஸ் தலைமை கூட இவர்களிடம் எடுத்துக்கூற வேண்டாமா" என்ற ரேஞ்சுக்கு பல பாஜக தலைவர்கள் சமூக வலைதளங்களில் காங்கிரஸாரை கிண்டல் அடித்து வருகின்றனர். "இமாச்சல சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வரும் என்பது தெரிந்திருந்தும், எந்த நம்பிக்கையில் இவர்கள் டெல்லிக்கு சென்று வருகின்றனர்" என பாஜக நிர்வாகி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications