3 மாநில முதல்வர்களை மாற்றுகிறது காங்கிரஸ்!
டெல்லி: மகாராஷ்டிரா, அஸ்ஸாம் மற்றும் ஹரியானா மாநிலங்களின் முதல்வர்களை மாற்ற காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. அதனால், கட்சி அமைப்புகளை மாற்றி அமைக்கும் பணியில், காங்கிரஸ், மேலிடம் ஈடுபட்டுள்ளது.
முதல்கட்டமாக, சில மாநில அமைப்புகளை கலைத்து உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிரா, அஸ்ஸாம் மற்றும் ஹரியானா மாநில முதல்வர்களை மாற்ற முடிவு செய்துள்ளது.
தலைமையுடன் பேசிய முதல்வர்கள்
இந்நிலையில், ஹரியானா முதல்வர் புபீந்தர் சிங் ஹூடா, மகாராஷ்டிரா முதல்வர் பிருதிவராஜ் சவான் அகியோர் கட்சி தலைமையுடன் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.
சோனியா உடன் சந்திப்பு
புபீந்தர் சிங் ஹூடா, டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நடைபெற்றது. இதேபோல் பிருதிவிராஜ் சவான், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேலை சந்தித்துப் பேசியுள்ளார்.
அஸ்ஸாம் முதல்வர் மாற்றம்
அஸ்ஸாம் மாநில முதல்வர் தருண் கோகோயைத்தான் முதலில் மாற்ற திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிகிறது. அஸ்ஸாம் மாநில மூத்த அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும், சோனியா காந்தியை சந்திக்க அனுமதி கோரியுள்ளதாக தெரிகிறது.
முதல்வருக்கு எதிராக போர்க்கொடி
அஸ்ஸாம் மாநில முதல்வர் தருண் கோகோயை மாற்ற வேண்டும் என, இரண்டு ஆண்டுகளாக, அவரின் அதிருப்தியாளர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இருப்பினும், கட்சி மேலிடம் அதை கண்டு கொள்ளவில்லை.
3 இடங்களில் மட்டுமே வெற்றி
சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், அஸ்ஸாமில் உள்ள மொத்தமுள்ள, 14 லோக்சபா தொகுதிகளில், மூன்று இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இது, முதல்வரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை, மேலும் வலுவடையச் செய்துள்ளது. அதனால், தருண் கோகோய் விரைவில் மாற்றப்படுவார்.
மகராஷ்டிரா நிலவரம்
மகாராஷ்டிராவில், முதல்வர் பிருதிவிராஜ் சவான் தலைமையிலான, காங்கிரஸ் - தேசியவாத காங்., கூட்டணி அரசு உள்ளது. இதில், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் சவானின் எதிர்ப்பாளர்கள் மட்டுமின்றி, தேசியவாத காங்கிரசும், சவானை மாற்ற வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளது.
சட்டமன்ற தேர்தல்
இந்த ஆண்டு இறுதியில், மகாராஷ்டிரா மாநிலத்தில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்குள் முதல்வரை மாற்றினால் மட்டுமே, கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உருவாகும் என, நம்பப்படுகிறது.
கட்சியில் சீர்திருத்தம்
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, கட்சி நிர்வாக அளவில் சீர்திருத்தம் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
மாநிலத்தலைமையில் மாற்றம்
மூன்று மாநிலங்களிலும், முதல்வர்களை மாற்ற, காங்கிரஸ் மேலிடம் தீர்மானித்துள்ளது. அத்துடன், கட்சியின் மாநில தலைமையிலும் மாற்றங்கள் நிகழலாம். இவ்வாறு, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.