மகாத்மா காந்தியின் முழுபெயர் தெரியாத மோடி நாட்டின் பிரதமராக விரும்புவதா?: கபில் சிபல்
ராஜஸ்தான் மாநிலத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசிய குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, மகாத்மா காந்தியின் பெயரை உச்சரிக்கும்போது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பதற்கு பதிலாக மோகன்லால் கரம்சந்த் காந்தி என்று கூறினார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டின் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படுகிற ஒருவர் நாட்டின் தேசத்தந்தையாக போற்றப்படுகிற அதுவும் குஜராத் மாநிலத்தை சேர்ந்த மகாத்மா காந்தியின் பெயரைக் கூட முழுமையாக அறிந்து வைத்திருக்கவில்லை என்பதே விமர்சகர்களின் கருத்தாக இருந்தது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கபில்சிபல், நாட்டின் வரலாற்றைப் பற்றி எந்த அறிவுமே இல்லாத ஒருவர் எப்படி வரலாற்றை உருவாக்குவார்? மகாத்மா காந்தியின் முழு பெயரைக் கூட அறியாத ஒருவர் எப்படி நாட்டின் பிரதமராக விரும்புவது? காந்தியின் முழு பெயரை சரியாக உச்சரிக்காததற்காக குறைந்தபட்சம் மன்னிப்பு கூட கேட்கவில்லையே அவர். என்று கொந்தளித்திருக்கிறார்.
ஏற்கெனவே இதேபோல் மோடி பல பொதுக்கூட்டங்களில் பல வரலாற்று தகவல்களை பிழையாக தெரிவித்திருக்கிறார். இப்படி மோடி கூறிய 300 பொய் தகவல்களை வைத்து தாம் ஒரு புத்தகமே போடப்போகிறேன் என்று ஏற்கெனவே காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கூறியிருந்தார்.
சர்ச்சைக்குரிய மோடியின் வரலாற்று பிழைகள்:
திருச்சி பொதுக்குட்டத்தில் பேசுகையில், தண்டியில் காந்தி உப்பு சத்தியாகிரகம் நடத்தியபோது, இங்கே திருச்சி அருகே வேதாரண்யத்தில் வ.உ.சி. தலைமையில் உப்பு சத்தியாகிரகம் நடந்தது என்றார்.
ஆனால் உண்மையில் நாகப்பட்டினம் அருகே உள்ள வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக போராட்டத்துக்கு தலைமை தாங்கியது வ.உ.சிதம்பரனார் அல்ல; இராஜகோபாலாச்சாரி என்பதுதான் வரலாறு.
இதைத் தொடர்ந்து பாட்னா பொதுக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, குப்தர் வம்சம் பற்றி நாம் நினைக்கும்போது உடனடியாக சந்திரகுப்தரின் ராஜநீதிதான் நினைவுக்கு வருகிறது என்றார்.
ஆனால் மோடி குறிப்பிடும் சந்திரகுப்தர், குப்த வம்சத்தைச் சார்ந்தவர் அல்ல; அவர் மெளரிய வம்சத்தைச் சார்ந்தவர் என்பதுதான் வரலாறு.
மேலும் பாட்னா கூட்டத்திலேயே, மாவீரன் அலெக்சாண்டர் இராணுவம், உலகத்தையே படையெடுத்து வெற்றி கண்டது. ஆனால், பீகார் தக்சசீலாவில் பீகாரிகளால் அதே இராணுவம் தோல்வி அடைந்து ஓடியது. அதுதான் பீகாரிகள் வலிமையைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டார்.
உண்மையில், அலெக்சாண்டர் இராணுவம் கங்கையைக் கடந்து வரவே இல்லை. பீகாரிகளால் தோற்கடிக்கப்படவும் இல்லை. தக்சசீலாவும் பீகாரில் இல்லை. அந்த இடம் பாகிஸ்தானில்தான் இருக்கிறது.
பின்பு குஜராத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், குஜராத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ஷியாம்ஜி கிருஷ்ணா வர்மாவையும், பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன அமைப்பான ஜன் சங்க்வை தோற்றுவித்தவரான ஷியாமா பிரசாத் முகர்ஜியையும் குழப்பி பேசினார். ஷியாமா பிரசாத் முகர்ஜி வெளிநாட்டில் உயிரிழந்ததாகவும் பேசினார் மோடி. மேடையிலேயே மோடி பேசுவது பிழை என்று அவரது கட்சியினராலேயே சுட்டிக்காட்டப்பட்டது.
ஆனால் தாம் இப்படி தொடர்ந்து வரலாற்று பிழைகளைப் பேசிவந்தாலும் அதைப் பற்றியெல்லாம் எந்த ஒரு வருத்தமும் தெரிவிக்காமல் தொடர்ந்து பிழையாகவே பேசிக் கொண்டிருக்கிறார் மோடி.