கஸ்டம்ஸ் கண்ணில் மண்ணை தூவி தங்கத்தை எப்படி கடத்தலாம்: புதிய யுக்தியை கையாண்ட கடத்தல்காரர்கள்
விசாகப்பட்டினம்: வீட்டு உபயோகப்பொருட்களுக்குள் மறைத்து வைத்து சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 63 கிலோ தங்கம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
திங்கட்கிழமை அதிகாலை நேரத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள விமான நிலையத்திற்கு வந்த 3 விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள 63 கிலோ தங்கத்தை சுங்கத்துறை மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் தங்கத்தை கடத்தி வந்த 55 தமிழர்களை கைது செய்தனர்.
This is how gold was concealed within electronic goods, like magnets, stand etc so detection wd be difficult pic.twitter.com/Nws6PjS5VK
— Uma Sudhir (@umasudhir) June 22, 2015
இது குறித்து வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் கூறுகையில்,
எலக்ட்ரானிக் பொருட்கள் வடிவில் சென்னையைச் சேர்ந்த குழுக்கள் தங்கத்தை கடத்தி வந்துள்ளன. ஆம்ப்ளிபயரில் உள்ள காந்தம், ஸ்பீக்கர் ஸ்டாண்ட், வாஷின் மெஷினில் உள்ள பாகம், ட்ராலி ஸ்டாண்ட், டிரான்ஸ்பார்மரில் உள்ள காந்தம் உள்ளிட்ட வடிவில் தங்கத்தை எடுத்து வந்துள்ளனர்.
விமான நிலையத்தில் உடைமைகளை ஸ்கேன் செய்யும் எக்ஸ்ரே கருவியில் இருந்து தப்பிக்க திறமையாக தங்கத்தை மறைத்து எடுத்து வந்துள்ளனர் என்றனர்.
இந்த ஆட்கள் சென்னையில் இருந்து மலேசியா அல்லது சிங்கப்பூர் சென்று தங்கத்தை டிவி, இன்டக்ஷன் ஸ்டவ், மினி வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களுக்குள் மறைத்து வைத்து கடத்தி வருகின்றனர். கெடுபிடி இல்லாத விமான நிலையத்தில் தங்கத்துடன் வந்து இறங்குகிறார்கள்.
தங்கக் கடத்தல் கும்பல்கள் பொதுவாக அடிக்கடி விமானத்தில் பயணம் செய்யாதவர்களாக தேர்வு செய்து அனுப்பி வைக்கிறது. விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் தற்போது தான் அதிக அளவில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தங்கத்தை எப்படி மறைத்து வைத்து கொண்டு வந்தார்கள் என்பது குறித்து பத்திரிக்கையாளர் உமா சுதிர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இப்படி தான் காந்தம், ஸ்டாண்ட், எலக்ட்ரானிக் பொருட்களுக்குள் மறைத்து வைத்து எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் தங்கத்தை கடத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.