16 வயசு சிறுமி மாரடைப்பால் பலி! முதல் 6 நிமிடங்கள் முக்கியம்.. குழந்தைகளிடம் இந்த அறிகுறிகளை பாருங்க
கடும் குளிரால் 16 வயதே ஆன பெண் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் வெறும் 16 வயதே ஆன சிறுமி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். சிறார்கள் மத்தியில் இப்போது மாரடைப்பு ஏற்பட என்ன காரணம் எடுத்துக் கொள்ள வேண்டிய சிகிச்சை உள்ளிட்டவை குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஷா நகரில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி விருந்தா திரிபாதி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போலப் பள்ளிக்குச் சென்றுள்ளார்.
மறுநாள் பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சிகள் விழா நடக்க இருந்த நிலையில், அதற்கான ஒத்திகை நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டுள்ளார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த சிறுமி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

16 வயது சிறுமி
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு CPR சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அந்த சிறுமியை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. வெறும் 16 வயதே ஆன அந்த சிறுமி இதய செயலிழப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் சொன்னதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் அந்த சிறுமிக்கு அதற்கு முன்பு இதுவரை எந்தவொரு மோசமான உடல்நிலை பாதிப்புகளும் இருந்தது இல்லை என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

என்ன காரணம்
கடும் குளிர் காரணமாக அந்த சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதிகாலையில் அங்கு கடும் குளிர் இருந்த நிலையில், மெல்லிய டிராக் பேண்டை அணிந்து கொண்டு அந்த பெண் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடும் குளிரால் அந்த சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தங்கள் மகள் இறந்த துக்கத்திலும் கூட அந்த சிறுமியின் பெற்றோர் செய்த ஒரு சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண் தானம்
அதாவது சிறுமி உயிரிழந்த சோகத்திலும் கூட, அவரது கண்களைப் பெற்றோர் தானமாக வழங்கியுள்ளனர். இதற்காக அந்த பெற்றோரைப் பலரும் பாராட்டி வருகின்றனர். வட இந்தியாவில் பல இடங்களில் காலை நேரத்தில் குறிப்பாக காலை 4 முதல் 10 மணி வரை இப்போது கடும் குளிர் இருக்கிறது. இது குறித்து இதயநோய் நிபுணர் டாக்டர் அனில் பரணி கூறுகையில், குளிர் அதிகம் இருக்கும் போது, நமது உடலில் ஹார்மோன்களின் அளவு அதிகரிக்கும். இதனால் உடலில் ரத்தக் கட்டிகள் உருவாகி, மாரடைப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, குளிர் காலநிலையை லைட்டான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்" என்றார்.

காரணம் என்ன
பொதுவாகவே இப்போது இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு அதிகரித்து வருகிறது. இதன் அறிகுறிகள் என்ன.. இதை எப்படித் தடுக்க வேண்டும் என்பதை விளக்கமாக பார்க்கலாம். சிறார்கள் மத்தியில் திடீர் மாரடைப்பு அல்லது எஸ்சிஏ (Sudden Cardiac Arrest) கணிசமாக அதிகரிப்பதாக ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருக்க வேண்டியது, நீரிழிவு, மது அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை இதற்கு முக்கிய காரணம். இருப்பினும், இந்த மோசமான பாதிப்பு இல்லாதவர்களுக்கும் இதுபோன்ற பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

முதல் ஆறு நிமிடங்கள்
திடீர் மாரடைப்பு பெரும்பாலும் முறையற்ற இதயத் துடிப்புகளால் தான் ஏற்படுகிறது.. இதனால் நமது உடலுக்குச் செல்லும் ரத்தம் சில நிமிடங்கள் தடைப்படுகிறது. மாரடைப்பு ஏற்படும் போது முதல் ஆறு நிமிடங்கள் ரொம்பவே முக்கியம். அதற்குள் உரியச் சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரே போகும் அபாயம் உள்ளது. அதாவது மனித இதயம் பொதுவாக நிமிடத்திற்கு 60-100 முறை துடிக்கும் நிலையில், அதில் ஏற்ற இறக்கங்கள் இருந்தால் கார்டியாக் அரித்மியா என்று அழைக்கப்படுகிறது.

அறிகுறிகள்
இதயம் துடிப்பது திடீரென நின்றுவிட்டால், ஆக்சிஜன் நிறைந்த ரத்தத்தின் உடல் உறுப்புகளுக்குச் செல்லாது. இதனால் சில நிமிடங்களில் மரணம் அல்லது மூளையில் நிரந்தர பாதிப்பு ஏற்படும். இருப்பினும், சில அறிகுறிகளை வைத்து நாம் இதைக் கண்டறிய முடியும்.
- மயக்கம்,
- குறைந்த அளவிலான நாடித் துடிப்பு,
- மூச்சுத் திணறல் அல்லது மயக்கம்,
- நெஞ்சு பகுதியில் வலி,
- பலவீனம் மற்றும் சோர்வாக உணர்வது,
- படபடப்பு,
- தலைச்சுற்றல் உள்ளிட்டவை முக்கிய அறிகுறியாகும்.

பிறக்கும் போதே பிரச்சினை
மாரடைப்பைத் தவிர்க்க முறையான டயட் மற்றும் சீரான உடற்பயிற்சியைச் செய்ய வேண்டியது முக்கியமாகும். அதேநேரம் சிலருக்குப் பிறக்கும் போதே சில பிரச்சினைகளால் இதய செயலிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது
மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்கள் மட்டுமே. இதை யாரும் மருத்துவ அறிவுரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் எதாவது பிரச்சினை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.












Click it and Unblock the Notifications