மனைவியிடம் இருந்து காப்பாற்றுங்கள்.. பெண் நீதிபதி மீது போலீசில் புகார் அளித்த கணவர்!
ஹைதராபாத் : பெண் நீதிபதியாக இருக்கும் தனது மனைவியும், அவரது குடும்பத்தாரும் தன்னைத் துன்புறுத்துவதாக ஆந்திராவில் கணவர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி அவர் நீதிமன்றத்தையும் நாடியுள்ளார்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் சாய்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜித்தேந்திரா. இவருக்கும் ஹைதராபாத் மியாபூர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றும் ஸ்ரீதேவி என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது.
திருமணமான சில நாட்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், மனைவியைப் பிரிந்தார் ஜிதேந்திரா. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனந்தபூர் நீதிமன்றம் மூலம் தனது மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார்.
ஜிதேந்திராவின் முடிவிற்கு ஸ்ரீதேவி மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை, ஜித்தேந்திரா அனந்தபூர் 2வது காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், ‘திருமணமான ஒரு வாரத்தில் எங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நான் மனைவியை விட்டு பிரிந்து தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறேன். விவாகரத்து கோரி அனந்தபூர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். என் மனைவி ஸ்ரீதேவி, அவரது தந்தை வெங்கடேஸ்வருலு, தாயார் அனுராதா மற்றும் அவர்களது குடும்ப நண்பர் சேகர் ஆகியோர் என்னுடைய வீட்டில் புகுந்து என்னையும், எனது பெற்றோரையும் தாக்கினர்.
இதனால் எங்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை. ஆகவே எங்களுக்கு எனது மனைவியின் குடும்பத்தார் மூலம் ஆபத்து உள்ளது. எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என ஜிதேந்திரா தெரிவித்துள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications