உப்பு சப்பில்லாத சாம்பார்.. காதல் மனைவியின் கதையை முடித்த கணவன்! கனவிலும் நினைக்காத கொடூர சம்பவம்!
பெங்களூர்: ஆசை அறுபது நாள் முகம் முப்பது நாள் என்பார்கள். அப்படி திருமணம் ஆன சில நாளிலேயே காதல் மனைவியை கொலை செய்திருக்கிறார் கணவன். அதுவும் சாம்பார் கூட வைக்க தெரியவில்லை என்ற ஆத்திரத்தில் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அதிர வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போதைய காலத்தில் காதல் திருமணம் ஆகியவை சாதாரணமாகிவிட்டது. காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் கூட ஒரு சில மாதங்களில் விலகி செல்வதை பார்க்க முடிகிறது. பிரபலங்கள் என்பதால் அவர்கள் செய்தியாகிறார்கள். ஆனால் சாதாரண நபர்கள் கூட சில மாதங்களிலேயே பிரிந்து செல்கிறார்கள்.
உரிய மெச்சூரிட்டி இன்றி திருமணம் செய்து கொள்பவர்கள் சில மாதங்களிலேயே இரு தரப்பையும் விட்டு விலகி சென்று விடுகிறார்கள். சில நேரங்களில் அது கொலை வரை கூட செல்லலாம். அப்படி ஒரு சம்பவம் தான் கர்நாடகாவில் அரங்கேறி இருக்கிறது. சுவையாக சாம்பார் கூட வைக்க தெரியவில்லை என காதல் மனைவியை கழுத்தை நெறித்துக் கொலை செய்திருக்கிறார் கணவர்.

பாகல்கோட்டை அருகே முக்கோலாகோடா பகுதியைச் சேர்ந்தவர் 21 வயதான பீரப்பா. கூலித் தொழிலாளியான இவர், பெலகாவி மாவட்டம் சுக்கோடு பகுதியில் சேர்ந்த 19 வயதான சாக்ஷிதா என்பவரை காதலித்துள்ளார். இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி இரண்டு பேரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதை அடுத்து வேறு வழியில்லை என அவர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் போலீசார் இருவரின் பெற்றோரையும் வர வைத்து சமாதானம் செய்திருக்கிறார்கள். தொடர்ந்து இரு தரப்பினரும் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்து சில நாட்கள் தான் ஆகிறது. தம்பதிகள் தனியே வசித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் திருமணம் ஆன புதிதிலிருந்து கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஒழுங்காக சமைக்க கூட தெரியவில்லை என பீரப்பா சண்டை போட்டு வந்திருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி இரவு சாப்பிட்ட போது வெள்ளை சாதத்துக்கு சாம்பாரும், காய்கறி மசியலும் செய்து வைத்திருக்கிறார் சாக்ஷிதா. ஆனால் சாம்பார் சரியாக வைக்கவில்லை, உப்பு காரம் எதுவும் இல்லை எனக் கூறி சாம்பார் கூட உனக்கு ருசியாக சமைக்க தெரியாதா என பேசி உள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஆத்திரம் அடைந்த பீரப்பா சக்ஷிதாவை கொடூரமாக தாக்கி கீழே தள்ளி மார்பின் மீது ஏறி அமர்ந்து கழுத்தை நெறித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் தான் கொலை சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து அங்கு சென்று அவர்கள் சாக்ஷிதாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பாகல்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் சமையல் செய்ய தெரியவில்லை என பீரப்பா அவரை அடிக்கடி அடித்துக் கொடுமை செய்ததும், சம்பவத்தன்று சாம்பார் ருசி இல்லை என தகராறு செய்ததில் அவரை கழுத்து நெறித்துக் கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த பீரப்பாவை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications