காவிரி: பெங்களூருவுக்காக இரவு பகலாக உழைத்த ஹைதராபாத் ஐ.டி. நிறுவனங்கள்
ஹைதராபாத்: காவிரி விவகாரத்தால் கர்நாடகாவில் வன்முறை வெடித்ததை அடுத்து, பெங்களூருவில் இயங்கி வரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பதிலாக, ஹைதராபாத்தில் உள்ள நிறுவனங்கள் இரவு பகலாக வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
பெங்களூருவில் கடந்த இரு தினங்களாக அசாதாரண நிலை நிலவியதால் முக்கிய ஐடி நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் ஆகிய நிறுவனங்கள் நேற்று தங்களது நிறுவனங்களுக்கு விடுமுறை விட்டிருந்தன. இருப்பினும் முக்கியப் பணிகளில் தொடர்புடையவர்களை மட்டும் வீடுகளிலிருந்து பணியாற்ற பணிக்கப்பட்டனர்.
பெங்களூருவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டதால், அங்கு இயங்கி வந்த அத்தியாவசிய சேவை மற்றும் சர்வர்களுக்கான நிறுவனங்களின் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த பணிகளை சரிகட்டும் வகையில், ஹைதராபாத்தில் இயங்கி வரும் நிறுவனங்களின் சுமார் 25 ஆயிரம் ஊழியர்கள் 12 முதல் 36 மணி நேரம் வரை கூடுதலாக பணியாற்றினர்.
பலரும் பணி முடிந்து வீட்டுக்குச் செல்லாமல் அலுவலகத்திலேயே சில மணி நேரங்கள் உறங்கிவிட்டு மீண்டும் பணியை தொடங்கும் நிலையும் கடந்த சில நாட்களாக இருந்ததாகக் கூறப்படுகிறது