ஐஎஸ்ஐஎஸ்சில் இணைந்த என் மகனை சட்டம் தண்டிக்கட்டும்- தந்தை
மும்பை: என் மகனை நான் முழுமையாக நம்பினேன். ஆனால் அவன் தவறான செயலில் ஈடுபட்டு என்னைக் கைவிட்டு விட்டான் என்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ள மும்பை கல்யாண் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பஹத் ஷேக்கின் தந்தை தன்வீர் ஷேக் வேதனை தெரிவித்துள்ளார்.
பஹத் ஷேக் மட்டுமல்லாமல், அமான் தான்டல், சஹீம் டங்கி, ஆரிப் மஜீத் ஆகியோரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்தவர்கள் ஆவர். இதில் ஆரிப் மஜீத் மட்டும் தாயகம் திரும்பி விட்டார். மற்றவர்களும் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில் மஜீத்தான் மற்றவர்களை அழைத்துச் சென்றவர் என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து அவரை தேசிய புலனாய்வு ஏஜென்சி அமைப்பினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது மகன் குறித்து தன்வீர் ஷேக் கூறுகையில், "எனது மகன் ஏதாவது தவறு செய்திருந்தால், குற்றம் இழைத்திருந்தால், சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும்" என்றார்.
தன்வீர் ஷேக் மேலும் கூறுகையில், மஜீத் இந்தியா வந்தபோது அவரை தேசதிய புலனாய்வு ஏஜென்சியினர் கைது செய்து விட்டதாக அறிந்தேன். எனது மகனுக்கும் அதே கதிதான் ஏற்படும் என்பதை நான் அறிவேன். தேசிய புலனாய்வு ஏஜென்சியின் விசாரணைக்கு எனது மகன் உட்பட வேண்டும், உண்மைகளைச் சொல்ல வேண்டும். அதில் நாங்கள் தலையிடவே மாட்டோம்
எனது மகன் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்து விட்டான் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை, ஏற்கவும் முடியவில்லை. இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து நாங்கள் மீளவில்லை.
குவைத்தில் பஹத்துக்கு ரூ. 3 லட்சத்தில் வேலை கிடைத்தது. ஆனால் அதை உதறி விட்டு அவன் ஆயுதத்தைத் தூக்கி விட்டான். இனி அவனது எதிர்காலம் கேள்விக்குறிதான் என்றார் தன்வீர் ஷேக்.
கடந்த மே 25ம் தேதி மேலும் 40 பேருடன் சேர்ந்து இந்த நால்வரும் எதிஹாட் விமானம் மூலம் பாக்தாத் சென்றுள்ளனர். புனிதப் பயணமாகத்தான் இவர்கள் போனார்கள். பின்னர் மே 31ம் தேதி இவர்கள் ஒரு டாக்சியைப் பிடித்து மோசூல் நகருக்குப் போயுள்ளனர். அங்கு போய் ஐஎஸ் அமைப்பில் இணைந்து விட்டனர்.
தற்போது நால்வர் மீதும் ஆசிய கூட்டு நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தது, சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் 3 பிரிவுகள் ஆகியவற்றின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பஹத் தனது குடும்பத்துடன் பேசியுள்ளார். மஜீத்தைப் போலவே தாயகம் திரும்ப பஹத்தும் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன்வீர் ஷேக் கூறுகையில், நான் எனது மகனுடன் அதிகம் பேசவில்லை. அவனது தாயார் தான் நிறையப் பேசினார். அவர்தான் மிகவும் கவலையாக இருக்கிறார் என்றார் ஷேக்.
ஷேக் மேலும் கூறுகையில், நான் நாட்டுப்பற்று நிறைந்தவன். எனது குடும்பத்தில் யாரும் எந்தத் தவறும் செய்ததில்லை. போலீஸ் நிலையத்துக்குக் கூட போனதில்லை. ஆனால் எனது மகன் என்னைக் கைவிட்டு விட்டான். அவனுக்கு நல்ல எதிர்காலம் இருந்தது. ஆனால் நாங்கள் காட்டிய அன்பையும், பாசத்தையும் அவன் சாதகமாக எடுத்துக் கொண்டு எங்களுக்குத் துரோகம் செய்து விட்டான் என்றார் வேதனையுடன்.
"இன்டர்நெட்தான் எனது மகன் கெட்டுப் போக முக்கியக் காரணம். இன்டர்நெட் மூலம் அவன் தவறான பாதையில் திரும்பி விட்டான். மூளைச் சலவைக்குள்ளாக்கப்பட்டு விட்டான். இதுபோன்ற தவறான இணையதளங்களைப் பார்த்துத்தான் இளைஞர்கள் தவறான பாதைக்குத் திரும்புகிறார்கள். அதைத் தடை செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் ஷேக் கூறினார்.
எங்களது மகனை நாங்கள் மன்னிப்போமா என்று கேட்டால் ஒரு தந்தை கல் மனதுக்காரராக இருக்க முடியும். ஆனால் ஒரு தாயாரால் அப்படி இருக்க முடியுமா என்று கூறினார் ஷேக்.