என் கேள்விகளுக்கு பதில் தர முடியாமல் திருதிருவென முழித்த சசிகலா.. போட்டுடைக்கும் ரூபா
அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா, தண்டனை அனுபவிக்கும் சிறைக்குள் சிறப்புச் சலுகைகள் அனுபவித்தபடி, மகிழ்ச்சியாக இருப்பதை நானே நேரடியாக பார்த்தேன் என்று, டிஐஜி ரூபா அதிரடியாகக் கூறியுள்ளார்.
பெங்களூரு: அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சிறப்புச் சலுகைகள் அனுபவித்தார் அதன் நான் நேரிலேயே கண்டேன் என்று டிஐஜி ரூபா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், " எனது கடமையை மட்டுமே இதுநாள் வரையும் செய்து வருகிறேன். இதற்காக, கடந்த 17 ஆண்டுகளில், 26 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளேன். எனினும், அதுபற்றி நான் கவலைப்படவில்லை. எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் எனக்கு ஒன்றுதான்.
சமீபத்தில், சசிகலா பற்றி நான் அளித்த புகார் கூட அப்படிப்பட்ட ஒன்றுதான். உரிய ஆதாரங்களுடன் நான் இந்த புகாரை அளித்துள்ளேன். வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளேன்.
சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எல்ஈடி டிவி, படுக்கை வசதி, என அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சிறையில் முதல் வகுப்பு கூட தரவில்லை. சாதாரண தண்டனைக் கைதி அந்தஸ்தில் உள்ள அவருக்கு, முதல் வகுப்பில் கூட வராத சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

கன்னடம் கற்கும் சசிகலா
நீங்க கன்னடம் கற்று வருவதாக கேள்விப்பட்டேன். அது உண்மையா என்று கேட்டேன். சசிகலாவுக்கு கன்னடம் கொஞ்சம் தான் தெரியும் என்பதால் எனது கேள்விகளை முழுமையாக அவரால் புரிந்து கொள்ளமுடியவில்லை. பதில் அளிக்க அவர் திணறினார்.

அறைக்குள் பூஜை
அடுத்து உங்கள் அறையில் சாமிப் படங்கள் மற்றும் சிலைகள் வைத்து பூஜை செய்ததைக் காட்டுங்கள் என்றேன். சசிகலாவும் அவற்றை எனக்குக் காட்டினார். அவ்வளவுதான்.

சிறைக்குள் சசிகலா தண்டனைக் கைதி
மற்றபடி, அவரிடம் பேச எனக்கு அவகாசம் கிடைக்கவில்லை. தனிப்பட்ட முறையில் அவர் எப்படிப்பட்டவர் என்றும் தெரியாது. ஆனால், சிறைக்குள் அவர் தண்டனைக்கைதி. அப்படித்தான் என்னால் நடத்த முடியும். அது முடியாமல் போனதால்தான், புகார் அளிக்க நேரிட்டது.

நிறைய பேருக்கு சொகுசு வாழ்க்கை
சசிகலா போல, நிறைய பேர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் எளிதாக புழங்குகின்றன.

கடமையைத்தானே செய்தேன்
சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்த முழு விவரங்களையும் எனது புகார் அறிக்கையில் தெரிவித்துள்ளேன். அதற்கான ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன.
சிறைத்துறை அதிகாரியான நான் எனது கடமையை செய்துள்ளேன்.

மான நஷ்ட வழக்குப் போடமுடியாது
சிறை அதிகாரியாக, நான் எனது கடமையைத் தானே செய்துள்ளேன். என் மீது மானநஷ்ட வழக்கு எதையும் தொடர முடியாது." என ரூபா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications