அல்கொய்தா அச்சுறுத்தலை சந்திக்க இந்தியா தயாராக உள்ளது! விமானப்படை தளபதி அதிரடி
தீவிரவாத இயக்கமான அல்கொய்தாவின் கிளை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் அது தன் 'புனித போரை' தொடங்கும் என்றும் சமூக வலைத்தளத்தில் அந்த இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஜவாகிரி பேசிய வீடியோ வெளியானது. இந்தியாவில் அல்கொய்தாவின் கிளை காயிதத் அல்-ஜிகாத் என்று அழைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், '1965ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்திய விமானப்படையின் பங்கு' என்ற தலைப்பில் டெல்லியில் கருத்தரங்கு ஒன்று நடந்தது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட விமானப்படை தளபதி அருப் ரஹா நிருபர்களிடம் கூறியதாவது: அல்கொய்தா போன்ற தீவிரவாத இயக்கங்கள் மிரட்டல்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்கிறது என்றார்.
முன்னதாக கருத்தரங்கில் அவர் பேசும்போது "வடகிழக்கு மாநிலங்களில் நவீன விமான இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இலகுரக போர் விமானங்கள், பலவித செயல்பாடுகளை கொண்ட போர் விமானங்கள், 5ம் தலைமுறை போர் விமானங்கள் ஆகியவற்றை இந்திய விமானப்படையில் சேர்ப்பது இதன் திறனை வலிமைப்படுத்துவதாக அமையும்.
1965ம் ஆண்டு நடந்த போரில் பாகிஸ்தான், அமெரிக்காவின் மிக நவீன போர் விமானங்களை பயன்படுத்தியது. ஆனால் நாம் கைவிடப்பட்ட போர் விமானங்களை கொண்டு, காஷ்மீரை பறிக்கும் பாகிஸ்தானின் முயற்சியை தோற்கடித்தோம்" என்றார்.