மும்பை, தாராவியில் பட்டப்பகலில் இளைஞர் சுட்டுக்கொலை!
மும்பை தாராவி பகுதியில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் இரண்டு பேரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மும்பை: மும்பை தாராவி பகுதியில் இளைஞர் ஒருவரை ஓட ஒட்ட விரட்டி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். கொலைக்கான காரணம், மற்றும் கொலையாளிகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மும்பை தாராவி கேளாபர் பகுதியில் பட்டப்பகலில் ஒரு இளைஞரை இருவர் துரத்திச் சென்றனர். அவரை ஒரு சந்துக்குள் விட்டு, துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். நெற்றியில் குண்டு பட்டு, அந்த இளைஞர் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு அருகில் இருந்த மக்கள் ஓடிவந்தனர். அதற்குள் சுட்டவர்கள் ஓடிவிட்டனர்.
உடனே, அங்கிருந்த பொதுமக்கள் தாராவி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீஸார், அவரை மீட்டு அருகிலிருந்த சயான் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
கொலை நடந்த இடத்தில் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது. மேலும் தடவியல் நிபுணர்களும் தடயங்களைச் சேகரித்தனர்.
கொலையுண்ட இளைஞருக்கு 30 வயதிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். கொலையாளிகள், இளைஞரின் செல்போன் மற்றும் பர்ஸை எடுத்துச் சென்றுவிட்டனர். யார், எதற்காக இந்தக் கொலையை செய்து வருகின்றனர் என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் வைத்து ஆய்வு செய்யும் நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.