திரிசூலமா? சிலுவையா? எதை தேர்ந்தெடுக்கப் போகிறது நாகாலாந்து?: சர்ச் கவுன்சில் கடிதத்தால் பரபரப்பு
நாகாலாந்தில் மக்கள் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தொடர்பாக அந்த மாநில பாப்டிஸ்ட் சர்ச் கவுன்சில் எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கோஹிமா: நாகாலாந்தில் நடக்கும் தேர்தலானது திரிசூலத்திற்கும், சிலுவைக்கும் இடையிலான போர் என்று அந்த மாநில பாப்டிஸ்ட் சர்ச் கவுன்சில் பகிரங்கமாக கூறியுள்ளது.
மொத்தம் 60 தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில் கடந்த 18-ஆம் தேதி 59 தொகுதிகளுக்கு மட்டும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
இத்தேர்தலில் நாகாலாந்து மக்கள் முன்னணி முன்னணியில் உள்ளது. ஆனால் இக்கூட்டணியும் பாஜகவுக்கு ஆதரவானதுதான். எனவே இது மீண்டும் ஆட்சியைப் பிடித்தாலும் கூட அது பாஜகவுக்கு ஆதரவாகவே இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
பகீர் கேள்வி
இந்த சூழலில் நாகாலாந்து பாப்டிஸ்ட் சர்ச் கவுன்சில் ஒரு கடிதத்தை எழுதியுள்ளது. அதில் நாகாலாந்துக்குத் தேவை திரிசூலமா சிலுவையா என்று பகிரங்கமாக ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது.
மாநிலத்தை கொடுக்க கூடாது
அந்த கடிதத்தில் நாகாலாந்தின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் என்றே குறிப்பிட்டுள்ளது. அதில் கிறிஸ்துவத்தில் நம்பிக்கை உடையவர்கள் பணத்துக்காகவும், வளர்ச்சிக்காகவும் ஏசுவை எதிர்ப்போரிடம் மாநிலத்தை கொடுத்து விடக் கூடாது.
தாக்குதல்கள்
கடந்த 2015-2017-களில் சிறுபான்மை மக்கள் கடுமையாக துன்புறுத்தப்பட்டதை இந்தியா பார்த்துவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த தாக்குதல்கள் மூன்று மடங்கு ஆகிவிட்டது என்பதை அனைவரும் அறிவர்.
வலுவடைந்து வருகிறது
கடந்த சில ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இந்துத்துவா அமைப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தீவிரமடைந்தும் வலுவடைந்தும் வருகிறது என்பதை நாம் மறுக்க முடியாது.
அவமானம்
இந்தியாவில் கிறிஸ்துவத்தை எதிர்க்கும் நபர்களுடன் நாகாலாந்து அரசியல்வாதிகள் சென்றுவிட்டால் அதை கடவுள் விரும்ப மாட்டார். பாதிரியார்கள், மத போதகர், பிராசாரகர்கள் மற்றும் கிறிஸ்துவ தொண்டு நிறுவனம் வைத்துள்ளோர் என அனைத்து தரப்பினரும் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளனர்.
நீங்களே முடிவு செய்யுங்கள்
பைபிளை தீவைத்த சம்பவங்களும் நடைபெற்றன. வழிப்பாட்டு தலங்களிலும் தீவைக்கப்பட்டு கிறிஸ்துவ நம்பிக்கை உடையவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இவற்றை மனதில் வைத்து கொண்டு திரிசூலமா இல்லை சிலுவையா என்பதை நீங்களே முடிவு செய்துவிடுங்கள் என்று அந்த கடிதத்தில் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்தக் கடிதமானது, தேர்தல் முடிவுக்குப் பின்னர் நாகா மக்கள் முன்னணி பாஜக பக்கம் போய் விடக் கூடாது என்ற எச்சரிக்கையில் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது.