வருமான வரி உச்சவரம்பு ரூ. 2.5 லட்சமாக உயர்வு! மாத ஊதியம் பெறுவோருக்கு நற்செய்தி!
டெல்லி: வருமான வரி உச்ச வரம்பு ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியானது.
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்பட்டால், மாத சம்பளக்காரர்கள் லட்சக்கணக்கானோர், வருமான வரி செலுத்துவதில் இருந்து விடுபடுவார்கள் அல்லது அவர்கள் கட்டி வரும் வரி குறையும். எனவே நடுத்தர வர்க்கத்தினர் இந்த அறிவிப்பை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
முதியோருக்கும் சலுகை
அதே போல 60 வயதை தாண்டிய முதியோருக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பும் ரூ. 2.50 லட்சத்தில் இருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 80 வயதை தாண்டியவர்களுக்கு ரூ. 5 லட்சம் வருமானம் வரை வரி கிடையாது.
புதிய வரி விகிதம் இது தான்:
நிதியமைச்சரின் புதிய அறிவிப்புபடி, ஆண்டு வருவாய் ரூ. 2.5 லட்சம் வரை இருந்தால், வருமான வரி கிடையாது.
ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை வருமானம் இருந்தால் மீது 10 சதவீத வரி விதிக்கப்படும்.
ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையில் ஆண்டு வருவாய் இருந்தால் 20 சதவீத வரி விதிக்கப்படும்.
ரூ. 10 லட்சத்தக்கு மேல் வருவாய் இருந்தால், அதன் மீது, 30 சதவீத வருமான வரி விதிக்கப்படும்.