வந்தார் ஒபாமா... வரலாறு காணாத பாதுகாப்பு முற்றுகையில் டெல்லி!
டெல்லி: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வந்துள்ளதைத் தொடர்ந்து டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் உயரமான கட்டடங்களில் துப்பாக்கியால் துல்லியமாகச் சூடும் வீரர்களும், துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெல்லி வான்பகுதிக்குள் ஊடுருவும் விமானத்தை சுட்டுத்தள்ளும் வகையில், விமான எதிர்ப்பு பீரங்கிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. டெல்லி முழுவதும் போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தலைநகர் முழுவதும் 15 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பாதுகாப்பு கருதி மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுகிறது. அன்றைய தினம் உயரமான கட்டடங்களை மூட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குடியரசு தின விழா நடைபெறும் பகுதியில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒபாமா அமரும் இடத்தில் மட்டும் 150 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 40 மோப்ப நாய்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க 36 கிலோ மீட்டர் தூரத்திற்கு கேபிள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒபாமா இருக்கும் இடத்தில் இருந்து 200 மீட்டர் வரை 60 அமெரிக்க அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு டெல்லி போலீசாருடன் தொடர்பு கொள்வதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
டெல்லிக்கு 2வது முறை அதிபராக ஒபாமா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2 முறை இந்தியாவுக்கு விசிட் அடித்த முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையும் ஒபாமாவுக்குக் கிடைத்துள்ளது.