லடாக்கில் மீண்டும் வாலாட்டும் சீனா ராணுவம்! 35 வீரர்கள் ஊடுருவல்!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் சீனா ராணுவம் மீண்டும் வாலாட்டத் தொடங்கியுள்ளது. லடாக் எல்லையில் 35 சீனா வீரர்கள் ஊடுருவியிருப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து வியாழக்கிழமை இரவு 9.45 மணிக்கு, லடாக்கின் சுமர் பகுதியில் ஊடுருவியிருந்த சீனப் படையினர் எந்தவித முன்னறிவிப்புமின்றி வெளியேறத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து, அங்கிருந்த இந்திய ராணுவ வீரர்களும் வெளியேறினர்.
இந்நிலையில் சீன ராணுவத்தினர் 35 பேர் திரும்பி வந்து, சுமரில் உள்ள சிறுகுன்றின் மீது தங்கியுள்ளனர். அந்தப் பகுதி, சீனாவுக்கு சொந்தமானது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதவிர, இருநாடுகளுக்கு இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி அருகே, சீன ராணுவ வீரர்கள் 300 பேர் முகாமிட்டுள்ளனர். இதனால் லடாக்கில் இருந்து திரும்பத் தொடங்கிய இந்திய வீரர்கள், அப்பகுதியில் மீண்டும் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர்.
இதனால் எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.