"மீனவர்களை சுட்டுக் கொல்வோம்" பேட்டிக்கு ரணில் வருத்தம் தெரிவித்தார்: ராஜ்யசபாவில் சுஷ்மா
டெல்லி: எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வோம் என அளித்த பேட்டிக்கு தம்மிடம் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வருத்தம் தெரிவித்ததாக ராஜ்யசபாவில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுடுவதற்கு எங்களுக்கு சட்டம் அனுமதி அளித்துள்ளது என்று கூறியிருந்தார். இந்த பேட்டிக்கு தமிழக தலைவர்கள், மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த பிரச்சனை குறித்து ராஜ்யசபாவில் இன்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம் அளித்து பேசியதாவது:
இந்திய மீனவர்களின் நலனை பாதுகாப்பதில் இந்திய அரசுக்கு கடமை உண்டு. மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு ஒரு மீனவர் கூட சுட்டுக் கொல்லப்படவில்லை.
இந்தியாவில் இலங்கை மீன்வர்களோ இலங்கையில் இந்திய மீனவர்களோ எவரும் சிறையில் இல்லை. பிரதமர் மோடி இலங்கை செல்வதால் இருதரப்பு மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் எல்லை தாண்டினால் சுடுவோம் என்று பேட்டியளித்தது குறித்து ரணிலிடம் நீண்ட நேரம் பேசினேன். தமிழக மீனவர்கள் குறித்து தாம் அவ்வாறு கூறியிருக்கக் கூடாது என என்னிடம் ரணில் வருத்தம் தெரிவித்தார்.
மோடி இலங்கை செல்லும் நிலையில் இரு தரப்பை உறவு மேம்படுத்துவது குறித்து யோசிக்க வேண்டும் எனவும் ரணிலிடம் கூறினேன்.
இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.