இந்தியா போலியோ இல்லாத நாடு... உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டெல்லி: இந்தியாவை போலியோ இல்லாத நாடாக உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் உலக சுகாதார அமைப்பால் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் ‘போலியோ இல்லாத நாடாக' அறிவிக்கப்பட்டுள்ள 11-வது நாடு இந்தியா என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
இதற்கான சான்றிதழை டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகளிடம் இருந்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் பெற்றுக் கொண்டார்.
கடைசியாக பதிவான போலியோ தாக்கம்...
கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் கண்டறியப்பட்ட இரண்டரை வயது பெண் குழந்தையே இந்தியாவில் கடைசி போலியோ நோயாளியாக பதிவு செய்யப்பட்டது.
போலியோ இல்லாத நாடு...
அதனைத் தொடர்ந்து இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக போலியோ நோய்த்தாக்கம் எதுவும் காணப்படாத நிலையில் உலக சுகாதார அமைப்பு அதற்கான சான்றிதழை இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது.
சாதனை...
ஐந்து வருடங்களுக்கு முன்னால் உலகளவில் பாதி சதவிகித நோய்த்தாக்கம் இந்தியாவில் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவிலிருந்து போலியோ நோய் ஒழிக்கப்பட்டது உலக சுகாதார முயற்சிகளில் பெரும் சாதனையாகக் கருதப்படுகின்றது.
கண்காணிப்பு வலையமைப்பு....
இந்தியாவில் இருந்து போலியோவை ஒழிப்பதற்காக மிகப்பெரிய கண்காணிப்பு வலையமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு 2.3 மில்லியன் நிர்வாகிகள் இதற்கென செயல்பட்டு அனைத்து சமூகங்களுக்கும் இந்த சேவைகள் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டதாக யூனிசெப் அமைப்பு தெரிவிக்கின்றது.
விழிப்புணர்வு....
சிகிச்சை எதுவும் இல்லாத இந்த நோயினை தடுப்பு மருந்து மூலம் வராமல் காக்க முடியும் என திரைத்துறை பிரபலங்கள், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் போன்றோரின் பிரச்சாரங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.
நன்றி... நன்றி... நன்றி...
இடைவிடாத செயல்பாட்டின் மூலம் தற்போது இந்தியா போலியோ இல்லாத நாடாக உருவாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான சான்றிதழை உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகளிடம் பெற்றுக் கொண்ட குலாம் நபி ஆசாத், போலியோ ஒழிப்பில் அரசுடன் இணைந்து பாடுபட்ட உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
தன்னார்வ தொண்டர்கள்...
மேலும், போலியோவை ஒழிக்க 23 லட்சம் தன்னார்வத் தொண்டர்களைக் கொண்ட குழுக்களும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் கண்காணிப்பாளர்களும் இரவு பகலாக உழைத்தது நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையையும் சென்றடைந்துள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.