வேலை இல்லா திண்டாட்டத்தை குறைப்பது எப்படி? மோடி தலைமையில் ஆலோசனை
டெல்லி: நாட்டில் வேலை இல்லாத திண்டாட்டம் அதிகரித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ள சூழ்நிலையில், பிரதமர் மோடி இதுகுறித்து ஆய்வு நடத்த உள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த ஆய்வு நடைபெற உள்ளது.
சமீபத்தில் மத்திய அரசு தனது மூன்றாவது ஆண்டு பதவி ஏற்பு விழாவை கொண்டாடியது. அப்போது அரசு என்னதான் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துவிட்டதாக கூறிக்கொண்டாலும் வேலை வாய்ப்பு பெருகவில்லையே என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளாலும், பொதுமக்களாலும் முன் வைக்கப்பட்டது.
இதற்கு தக்க பதில் தர முடியாமல் திணறிவிட்டது மத்திய அரசு. ஏனெனில், வேலை வாய்ப்பு குறித்த சரியான புள்ளி விவரம் அரசிடம் இல்லை என கூறப்படுகிறது. சிலரோ, புள்ளி விவரம் இருந்தாலும், அதில் நம்பகத்தன்மை இல்லை என கூறுகிறார்கள்.
நிதி ஆயோக்
இதையெல்லாம் கருத்தில் வைத்து வரும் ஞாயிற்றுக்கிழமை மோடி தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில், வேலை வாய்ப்பு குறித்து முன்னுரிமை கொடுத்து ஆலோசிக்கப்பட உள்லது.
புள்ளி விவரம்
உறுதியான புள்ளி விவரங்களை சேகரிப்பது எப்படி என்பது குறித்தும், புதிதாக உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்படும்.
வேலை வாய்ப்பு
அதிக வேலைவாய்ப்பை வழங்க கூடிய தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான வழி முறைகளை நிதி ஆயோக் உருவாக்கி தர வேண்டும்.
தொழில்கள்
உணவு பதனிடுதல், எலக்ட்ரானிக் பொருட்களை அசெம்பிள் செய்வது, தோல் பொருட்கள் மற்றும் ஆடை ஆபரண தொழில்களுக்கு ஊக்கம் கொடுப்பது போன்றவை, வேலை வாய்ப்பை பெருக்கும் என்பது நிதி ஆயோக் தி்டமாகும்.