அக்னி ஏவுகணை சோதனை வெற்றி… இலக்கை தாக்கியது
பாலாசூர்: அக்னி ஏவுகணையை இந்தியா முதன்முறையாக இரவில் சோதனை செய்து வெற்றி கண்டுள்ளது.
தரையில் இருந்து பாய்ந்து சென்று 700 கி.மீ. தொலைவு வரை உள்ள எதிரிகளின் இலக்கைத் தாக்கும் அணு ஆயுத வல்லமை கொண்ட இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-ஐ ஏவுகணை, வெள்ளிக்கிழமை இரவு 11.10 மணி அளவில் ஒடிஸா மாநிலம் பாலாசூர் அருகே வீலர் தீவில் வாகனம் ஒன்றில் இருந்து இந்திய ராணுவம் ஏவி சோதனை செய்தது.
இந்தச் சோதனை அனைத்து வழிவகைகளிலும் வெற்றிகரமாக இலக்கை எட்டியது என்று பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) செய்தித் தொடர்பாளர் ரவிகுமார் குப்தா, செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலையும் சமாளிக்கும் வகையில் ராணுவம் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யும் வகையில், இரவு நேரத்தில் இந்தச் சோதனை முதன்முறையாக நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையை, இந்திய ராணுவத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு உத்திசார் அதிரடிப் படையினர், பயன்பாட்டு நோக்கில் நடத்தியதாக வீலர் தீவில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் திட்டத்தின் இயக்குநர் எம்.வி.கே.வி.பிரசாத் தெரிவித்துள்ளார்.