வெறும் 5 ஷில்லிங்குக்காக... 200 வருடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா!
டெல்லி: இந்தியா, இங்கிலாந்திடம் கிட்டத்தட்ட 200 வருடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. வியாபாரிகளாக வந்தவர்கள் மொத்த பாரதத்தையும் வளைத்துப் பிடித்து ஆட்சி புரிந்தனர். இதற்கெல்லாம் மூல காரணம்.. வெறும் (அந்தக் காலத்து) 5 ஷில்லிங் காசுகள்தான் என்றால் நம்ப முடிகிறதா... நம்பித்தான் ஆக வேண்டும்.
இன்னும் சுருங்கச் சொல்வதானால் வியாபாரிகளுக்கு இடையே ஏற்பட்ட வியாபார பிணக்குதான் இந்தியா இந்த அளவுக்கு அடிமைப்பட்டுக் கிடக்க மூல காரணம்.
ஒரு வியாபாரிக் குழு நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தது.. இன்னொரு குரூப், இங்கிலாந்து வியாபாரிகள். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பிறந்ததுதான்... கிழக்கிந்திய கம்பெனி.
இதுதொடர்பாக படித்த ஒரு கட்டுரையிலிருந்து...
16வது நூற்றாண்டில்.. ஒரு காட்சி
அது 16ம் நூற்றாண்டு. டச்சு நாட்டு வியாபாரிகள்தான் நறுமணப் பொருள் விற்பனையை இந்தியாவில் தங்களது கட்டுக்குள் வைத்திருந்தனர். அவர்களைத் தாண்டி யாரும் எதுவும் செய்ய முடியாத நிலை.
5 ஷில்லிங் விலை உயர்வு
இந்த நிலையில் 1599ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நறுமணப் பொருட்களின் விலையை 5 ஷில்லிங் (அப்போது இருந்த இங்கிலாந்து நாணயம் அது) அளவுக்கு உயர்த்தினர் டச்சு வியாபாரிகள்.
கொதிப்படைந்த இங்கிலாந்து வியாபாரிகள்
இது இங்கிலாந்து வியாபாரிகளை கொதிப்படைய வைத்தது. இதையடுத்து 1599ம் ஆண்டு, செப்டம்பர் 24ம் தேதி லண்டன், லீடன்ஹால் தெருவில் உள்ள ஒரு இடத்தில் 24 வியாபாரிகள் கூடி ஆலோசனை நடத்தினர்.
தனி நிறுவனம் தொடங்க முடிவு
இந்த ஆலோசனையின் இறுதியில் நாமே தனியாக ஒரு நிறுவனத்தைத் தொடங்குவது என்றமுடிவுக்கு அவர்கள் வந்தனர். இதையடுத்து தங்களுடன் சேர்ந்து செயல்பட முன்வந்த 125 பேரை பங்குதாரர்களாக சேர்த்தனர். நிதி வசூல் செய்தனர்.
72,000 பவுண்டு முதலீட்டில்
அதில் 72,000 பவுண்டு அளவுக்கு பணம் சேர்ந்தது. அதை வைத்து புதிய நிறுவனத்தைத் தொடங்கினர். இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கமே, லாபம் பார்க்க வேண்டும் என்பதே. டச்சுக்காரர்களை தூக்கி எறிய வேண்டும். லாபம் மொத்தமும் நமக்கு வர வேண்டும் என்பதே இந்த நிறுவனத்தின் நோக்கம்.
பிறந்தது கிழக்கிந்திய கம்பெனி
அந்த நிறுவனம்தான் கிழக்கிந்திய கம்பெனி. 1599ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி இந்த நிறுவனத்திறகு அப்போதைய ராணி முதலாம் எலிசபெத் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து அது செயல்பாட்டைத் தொடங்கியது.
வரலாறு காணாத வளர்ச்சி
தொடங்கப்பட்ட நாள் முதல் தொடர்ந்து வளர்ச்சியை மட்டுமே கண்டு வந்தது கிழக்கிந்திய கம்பெனி. அதன் விஸ்வரூப வளர்ச்சியை யாருமே எதிர்பார்க்கவில்லை. அந்த அளவுக்கு அதி வேகமாக அது வளர்ந்தது.
இந்தியாவுக்குள் முதல் முறையாக ஊடுறுவிய பிரிட்டிஷ்
1600ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி கிழக்கிந்திய கம்பெனியின் கப்பல்கள் சூரத்துக்கு வந்து சேர்ந்தன. பிரிட்டிஷ்காரர்கள் முதல் முறையாக இந்தியாவுக்குள் அதிகாரப்பூர்வமாக ஊடுறுவிய நிகழ்வு அதுதான்.
படிப்படியாக அடிமைப்பட்ட இந்தியா
அதன் பிறகு படிப்படியாக இந்தியாவின் வர்த்தகத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் கிழக்கிந்திய கம்பெனியினர் ரூபத்தில் வந்த வெள்ளையர்கள்.
1757 முதல் 1857 வரை
அதன் பின்னர் 1757 முதல் 1857வரை இந்தியா கிழக்கிந்திய கம்பெனியின் கையில்தான் இருந்தது. இந்தியா முழுவதும் இந்த கம்பெனிக்கு அடிமையாகிப் போய்க் கிடந்த கொடூரமான காலம் அது.
கலைக்கப்பட்ட கம்பெனி
அதன் பின்னர் 1857ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி கலைக்கப்பட்டது. அதற்குக் காரணம் அந்த ஆண்டு நடந்த இந்தியர்களின் முதல் புரட்சி. இந்தக் கலகத்தைத் தொடர்ந்து கம்பெனியைக் கலைத்து விட்டு இங்கிலாந்து அரசே, இந்தியாவின் நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்டது.
வெள்ளையர் ஆட்சியின் தொடக்கம்
கிழக்கிந்திய கம்பெனி மூலம் இந்தியாவைக் கட்டுப்படுத்தி வந்த வெள்ளையர்கள் அந்த ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக இந்தியாவை ஆளத் தொடங்கினர்.
90 வருட சோகம்
அதன் பிறகு 90 வருட காலம் இந்தியா, இங்கிலாந்து ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடித் துடித்தது. லட்சோபம் லட்சம் இந்தியர்களின் ரத்தத்தை வெள்ளையர்கள் குடித்தனர். எண்ணற்ற தியாகங்களுக்கு மத்தியில் 1947ம் ஆண்டு நமக்கு விடுதலையும் கிடைத்தது.
அந்த 5 ஷில்லிங் உயர்வு மட்டும் இல்லாமல் போயிருந்தால்
ஒரு வேளை அந்த 5 ஷில்லிங் கட்டண உயர்வை மட்டும் டச்சுக்காரர்கள் அறிவிக்காமல் போயிருந்தால், வெள்ளையர்கள் இந்த அளவுக்கு ஆக்கிரமிக்காமல் போயிருப்பார்களோ என்னவோ அல்லது நமது வரலாறும் கூட வேறு மாதிரியாக மாறிப் போயிருக்கலாம்.
விதி வலியது...!