மத்திய பட்ஜெட் 2019: இந்திய பொருளாதாரம் 3 லட்சம் கோடி டாலராக வளர்ச்சி பெறும்: நிர்மலா சீதாராமன்
Recommended Video
டெல்லி: இந்திய பொருளாதாரம் நடப்பு ஆண்டிலேயே 3 லட்சம் கோடி டாலராக வளர்ச்சி பெறும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
நாட்டின் பொருளாதாரமானது 5 ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச அளவில் 11-வது இடத்தில் இருந்தது. நடப்பு ஆண்டில் நமது பொருளாதாரமானது 3 லட்சம் கோடி டாலராக வளர்ச்சி அடையும்.
இது சர்வதேச அளவில் 6-வது இடமாகும். அடுத்த சில ஆண்டுகளில் இந்திய பொருளாதாரமானது 5 ட்ரில்லியன் டாலர்களாக வளர்ச்சியடையும்.
ஒரே நாடு ஒரே மின்விநியோக திட்டம்.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
மின்சக்தி துறையிலும் ஒரே தேசம்
மின்சக்தித்துறையில் ஒரே நாடு ஒரே கிரிட் என்பதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. நீர்வழிப் போக்குவரத்து மூலம் சரக்குகளை எடுத்துச் செல்வது ஊக்கப்படுத்தப்படும். ஏற்கனவே வாரணாசியில் கங்கை நதியில் நீர்வழிப் போக்குவரத்துக்கான சரக்கு முனையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நிறுவனங்களுக்கு ரூ1 கோடி கடன்
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ 1 கோடி வரை கடன் வழங்கப்படும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக வளர்ச்சிக்கு பாடுபடும் நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலிடப்படும். சிறுவணிகர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்.
ரயில்வே துறை தனியார்மயம்
2018-19 நிதியாண்டில் அன்னிய முதலிடு வலுவான நிலையில் உள்ளது, 2030ம் ஆண்டு வரை ரயில்வே கட்டுமானத்துக்கு ரூ.50 லட்சம் கோடி தேவைப்படுகிறது, ஆகையால் தண்டவாளங்கள் அமைத்தல், பயணிகள் ரயில் இயக்கம் உள்ளிட்டவைகளில் தனியார் ஒத்துழைப்பு பெறப்படும்.
பாரத்மாலா திட்டம் விரிவாக்கம்
மேலும் பாரத்மாலா மற்றும் சாகர்மாலா ஆகிய திட்டங்கள் மூலம் போக்குவரத்து துறை உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது. மின்சாரத்தில் இயங்கக்கூடிய வாகனங்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும், இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.