இந்தியா மீது பாகிஸ்தான் மறைமுகப் போரா?
டெல்லி: இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் மறைமுக போரை தொடுத்துள்ளதாக பாதுகாப்பு நிபுணர் சிஆர் சிங்கோ கூறியுள்ளார்.
காஷ்மீரில் புர்கான் வானி கொல்லப்பட்டதில் இருந்து அங்கு தொடர்ந்து அமைதியின்மை நிலவி வருகிறது. போராட்டங்கள், கல்லெறிதல், துப்பாக்கிச் சூடு என அன்றாடம் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதனால் சுமார் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அமைதிக்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டும் பயன் எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில், யூரியில் ராணுவ தலைமை அலுவலகத்தில் தீவி்ரவாதிகள் இன்று பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 17 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் பாதுகாப்பு படையினரால் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பதற்றத்தை காஷ்மீரில் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, பாதுகாப்பு நிபுணர் சிஆர் சிங்கோ கூறுகையில், பலுசிஸ்தான் பிரச்சனையால் நடுக்கம் அடைந்து உள்ள பாகிஸ்தான், இந்தியாவிற்கு எதிராக மறைமுக போரை முன்னெடுத்து உள்ளதாக தெரிகிறது. நடைமுறைக்கு சாத்தியமான நடவடிக்கையை இந்தியா முன்னெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக, இந்திய சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, பலுசிஸ்தானத்தில் பாகிஸ்தான் மனித உரிமையை மீறி வருவதாக குற்றம் சாட்டியிருந்தார். இதனால் பலுசிஸ்தான் பிரச்சனை மேலேழுந்து வந்து அனைத்து தரப்பிரனரும் பேசும் பொருளாக மாறியது. இதனையடுத்து காஷ்மீரில் இதுபோன்ற செயல்களை பாகிஸ்தான் தூண்டிவிலாம் என்று கூறப்படுகிறது.