பாலய்யா எங்கய்யா? எங்க எம்எல்ஏவை காணோம்.. போலீசில் மக்கள் கம்ப்ளைன்ட்! சூப்பர் ஸ்டாருக்கு இந்த கதியா?
அமராவதி: ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் இந்துபுரம் தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் நடிகர் பாலகிருஷ்ணா மீது தொகுதியை சரியாக கவனிக்கவில்லை என்று கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் குறிப்பாக தெலுங்கு திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் பாலகிருஷ்ணா, அரசியலிலும் பங்கெடுத்து வருகிறார்.
இந்துபுரம் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு இரண்டு முறை இவர் தேர்வாகி இருக்கும் நிலையில், தொகுதி மக்களின் நலனுக்கு எதுவும் செய்யவில்லை என்று காவல்நிலையத்தில் இவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார்
தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நந்தமூரி பாலகிருஷ்ணனா தனது 14 வயதிலிருந்தே சினிமா துறையில் நடித்து வருகிறார். 1980களிலிருந்து இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். தற்போதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். தற்போது நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இருப்பினும் இவர் அரசியலிலும் பங்கெடுத்து வருகிறார். தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து கட்சியின் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

நடவடிக்கை கோரி புகார்
இவ்வாறு இருக்கையில், கடந்த இரண்டு முறையும் ஆந்திரப் பிரதேசத்தின் இந்துபுரம் தொகுதியின் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் இவர் தொகுதி பக்கம் வருவதே இல்லையென்று அடிக்கடி சொல்லப்பட்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. அதில், "இரண்டு முறை எம்எல்ஏவாக உள்ள அவர் தொகுதியை சரியாக கவனிப்பதில்லை. தொகுதி பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் பின்னணி
தொடக்கத்தில் சினிமா பணிகளில் மும்முரமாக இருப்பதால்தான் தொகுதி பக்கம் வரமுடியவில்லை என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக எம்எல்ஏவாக தேர்வாகியும் தொகுதியில் நிலவும் பிரச்னை மீது அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணாவுக்கு அரசியல் பழக்கப்படாமல் இல்லை. அவருடைய தந்தை என்.டி.ராமா ராவ் ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக பணியாற்றியுள்ளார். எனவே பாலகிருஷ்ணா அரசியல் பின்னணியிலிருந்துதான் பிறந்துள்ளார்.

எதிர்பார்ப்பு
இப்படி இருக்கையில் இந்த புகார்கள் அவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக ரசிகர் மன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார்கள் யாரோ சிலரின் தூண்டுதலின் பெயரிலேயே கொடுக்கப்பட்டுள்ளது என்றும் ரசிகர் மன்றத்தினர் தெரிவித்துள்ளனர். எப்படியாயினும் தொகுதியில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications