மனிதநேயமற்ற கொடூர தண்டனை... ஐ.நா வாக்கெடுப்பில் இருந்து விலகிய இந்தியா
டெல்லி: மரண தண்டனையும், சித்ரவைதையும் ஒன்றல்ல என்று கூறி மனிதநேயமற்ற கொடூர தண்டனைகளுக்காக பயன்படுத்தப்படும் பொருள்களின் வணிகத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்த சாத்தியங்களை ஆராயும் ஐ.நா சபையின் தீர்மானத்தில் வாக்களிக்காமல் இந்தியா விலகியுள்ளது.
கொடூர குற்றம் இழைத்தவர்களுக்கு மரண தண்டனை தரும் வழக்கம் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே வழக்கத்தில் உள்ளன. பல நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் மரண தண்டனை மற்றும் பிற சித்ரவதை உள்ளிட்ட மனிதநேயமற்ற கொடூர தண்டனைகளுக்காக பயன்படுத்தப்படும் பொருள்களின் வணிகத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று 193 உறுப்பினர்களை கொண்ட ஐ நா மன்றம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற முயன்றது.
இதற்காக ஐ.நா மன்றத்தில் 'சித்ரவதை அற்ற வர்த்தகம்: பொதுவான பன்னாட்டுத் தரநிலைகளுக்கான வாய்ப்புகள் அளவுகோல்களுக்கான ஆய்வு' என்ற தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது மொத்தம் 81 வாக்குகள் பதிவாகின. இதில் ஆதரவாக 20 வாக்குகளும், தீர்மான வாக்கெடுப்பில் இருந்து விலகுவதாக 41 வாக்குகளும் பதிவாகின. இந்தியாவும் இந்த வாக்கெடுப்பில் இருந்து விலகியுள்ளது.
கவலையளிக்கிறது
இந்தியாவைப் பொறுத்தவரை மரண தண்டனையை, பிற சித்ரவதைகள், கொடூர தண்டனைகளுடன் சரி நிகராக வைப்பது தங்களுக்கு ஏற்புடையதல்ல என்ற நிலைப்பாட்டில் உள்ளது. இந்த தீர்மானத்தில் இருந்து விலகியது குறித்து கூறிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பணி முதல் செயலர் பவ்லோமி திரிபாதி, "மரண தண்டனையை, சித்ரவதை மற்றும் பிற கொடூர தண்டனைகளுடன் சேர்ப்பது கவலையளிக்கிறது.
இந்தியா உறுதி
அதே வேளையில் இந்தியா சித்ரவதைகள், இழிவு படுத்தும் விதமான தண்டனைகள் மனிதாபிமானமற்ற சித்ரவதை முறைகளைத் தடுப்பதற்கு நிச்சயமாக ஆதரவளிக்கும். இது குறித்து தொடர்ந்து பேசியவர் சித்ரவதை என்பது குற்றம், ஆகவே ‘அது சட்டவிரோதமானது' என்பதிலும் இந்தியா உறுதியாக உள்ளது என்றார்.
மனித உரிமை
"சித்ரவதையிலிருந்து விடுதலை என்பது மனித உரிமை. இதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இவ்வகை மனித உரிமையை எந்த சூழ்நிலையிலும் மதிக்கவும் பாதுகாக்கவும் இந்தியா விரும்புகிறது" என்றும் பவ்லோமி திரிபாதி கூறினார். தொடர்ந்து மரண தண்டனை குறித்து பேசியவர், "எந்த ஒரு நாடும் தங்களது சட்ட அமைப்பு எப்படி இருக்க வேண்டும், தண்டனைச் சட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொள்வது இறையாண்மை உரிமையாகும்.
இந்தியா விலகியது
ஆகவே மரண தண்டனையை சித்ரவதை தண்டனைகளுடன் சேர்த்து வைத்துப் பேசுவது எங்களுக்கு ஏற்புடையதல்ல. இந்தியாவில் மிகவும் அரிதிலும் அரிதாக மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அது சட்டவிதிமுறைகளில் உள்ளது. ஆகவே இத்தகைய நடைமுறை சிக்கல்களினால் இந்த தீர்மானத்தில் வாக்களிப்பதிலிருந்து இந்தியா விலகியது" என்று தெளிவுபடுத்தினார் திரிபாதி.