உ.பி.யில் கொடூரம்: எய்ட்ஸ் பாதித்த கர்ப்பிணியை அசிங்கப்படுத்திய மருத்துவமனை
மீரட்: உத்தர பிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணியின் படுக்கையில் இவர் ஒரு எய்ட்ஸ் நோயாளி என்று மருத்துவமனை நிர்வாகம் பேப்பரில் எழுதி ஒட்டி அவரை அசிங்கப்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் பூஜா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). நிறைமாத கர்ப்பிணியான அவர் மீரட்டில் உள்ள லாலா லஜ்பத் ராய் நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 19ம் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரது பெட்டில் இவர் ஒரு எய்ட்ஸ் நோயாளி என்று பேப்பரில் எழுதி ஒட்டியதுடன், சிவப்பு ரிப்பனையும் கட்டி வைத்துள்ளனர் டாக்டர்கள். பூஜாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 3 நாட்கள் கழித்து அவரது ரத்தக் கழிவுகளை அவரையே சுத்தம் செய்ய வைத்துள்ளனர்.
இது மட்டும் அல்லாமல் மேலும் ஒரு எய்ட்ஸ் நோயாளி குழந்தையை உலகிற்கு கொண்டு வந்துவிட்டாயே என்று கூறி மூத்த டாக்டர் ஒருவர் பூஜாவை திட்டியுள்ளார். அவரை பார்க்க மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் பெட்டில் எழுதி ஒட்டப்பட்டிருந்த வாசகத்தை பார்த்து திரும்பிச் சென்றனர்.
இது குறித்து அறிந்த எய்ட்ஸ் நோயாளிகளின் உரிமைக்காக போராடும் கேர் சப்போர்ட் சென்டர் என்ற அமைப்பு நிர்வாகிகள் மருத்துவமனைக்கு வந்து அந்த வாசகம் அடங்கிய பேப்பரை கிழித்து எறிந்துவிட்டு மருத்துவமனை நிர்வாகத்தை கேள்வி கேட்டனர். அதன் பிறகு மருத்துவமனை நிர்வாகம் பூஜாவிடம் மன்னிப்பு கேட்டது.
இது பற்றி பூஜா கூறுகையில்,
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு என் கணவரிடம் இருந்து எனக்கு எய்ட்ஸ் நோய் வந்தது. எனக்கு எய்ட்ஸ் இருக்கும் விஷயத்தை யாருக்கும் தெரியாமல் 8 ஆண்டுகளாக ரகசியமாக வைத்திருந்தேன். தற்போது மருத்துவமனையின் செயலால் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அவர்கள் என் குழந்தையைக் கூட பழிக்கிறார்கள் என்று கூறி அழுதார்.












Click it and Unblock the Notifications