அயோத்தி துணை வழக்கின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
மசூதிகள் இஸ்லாம் மதத்தின் ஒரு முக்கிய அங்கமா என்பது குறித்த மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து விட்டது சுப்ரீம் கோர்ட்.
Recommended Video
டெல்லி: சர்ச்சைக்குரிய இடத்தில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுக்கு மசூதி அவசியமா என்ற அயோத்தியா துணை வழக்கின் அப்பீல் மனுவை இன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி, 1992, டிசம்பர் 6ல் இந்து அமைப்பினரால் இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த, அலகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி எனக்கூறப்படும் 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி முஸ்லிம் வக்ப் வாரியம், நிர் மோகி அகாரா அமைப்பு மற்றும் ராம் லல்லா அமைப்பு ஆகியவை பிரித்துக்கொள்ள வேண்டும் என 2010ல் தீர்ப்பு அளித்தது.
இந்த நிலையில் டாக்டர் இஸ்மாயில் பரூக்கி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மசூதிகள் இஸ்லாமின் முக்கிய அங்கம். எனவே பாபர் மசூதியை கையகப்படுத்தக் கூடாது என்று கோரியிருந்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்தது. மசூதிகள் இஸ்லாமின் முக்கிய அங்கமல்ல என்று அது கூறியிருந்தது.
முகம்மதிய சட்டத்தின்படி, முஸ்லீம்கள் எங்கிருந்தும் தொழுகை நடத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே மசூதிகள்தான் இஸ்லாமின் மதத்தின் முக்கிய வழிபாட்டுத்தலம் என்று கூற முடியாது என்று கூறி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு மீதான தீர்ப்பைத்தான் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அசோக் பூஷண், அப்துல் நசீர் அடங்கிய அமர்வு இன்று அறிவித்தது. அப்போது மனுவைத் தள்ளுபடி செய்வதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அசோக் பூஷண் ஆகியோர் தெரிவித்தனர். மேலும் அயோத்தி வழக்கை 7 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச்சுக்கு அனுப்பத் தேவையில்லை என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து அயோத்தி பிரதான வழக்கு விரைவாக நடைபெற முட்டுக்கட்டை நீங்கியுள்ளது.