6 நாள் சுற்றுப் பயணமாக இஸ்ரேல் அதிபர் ரில்வின் இந்தியா வருகை!
இஸ்ரேல் அதிபர் ரீயுவன் ரில்வின் 6 நாள் இந்திய சுற்றுப் பயணமாக இன்று காலை மும்பை வந்தடைந்தார்.
மும்பை: இந்தியாவில் 6 நாள் சுற்றுப்பயணமாக இஸ்ரேல் அதிபர் ரீயுவன் ரில்வின் இன்று காலை மும்பை வந்தடைந்தார். இருதரப்பு உறவை வலுப்படுத்தும் நோக்குடன் இங்கு வந்துள்ள அவருடன் கல்வியாளர்கள், தொழில் அதிபர்கள் என பெரும் குழுவும் வருகை புரிந்துள்ளது.
இக்குழுவினர் இன்று டெல்லி செல்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ள அதிபர் ரில்வின், இரு நாடுகளும் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களையும் நேரில் சென்று பார்வையிடுகிறார்.
சண்டிகரில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் வேளாண் தொழில்நுட்ப மாநாட்டினை தொடங்கி வைக்கிறார்.
கடந்த 2008-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட மும்பை தாக்குதலில் பலியானவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அவர் மரியாதை செலுத்த இருக்கிறார். 2008 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட மும்பை தாக்குதலில் நவம்பர் 26-ம் தேதி இஸ்ரேலைச் சேர்ந்த யூதர்கள் 6 பேர் பலியாகினர்.
மேலும், மகாத்மா காந்தி நினைவிடத்திலும், முதல் உலகப் போரில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவிடத்திலும் மரியாதை செலுத்த ரில்வின் திட்டமிட்டுள்ளார்.
இந்திய மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ள அதிபர் ரில்வின், யூத சமூகத்தவர்களையும் சந்தித்துப் பேச தீர்மானித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் நெருங்கிய நட்பு நாடான இந்தியாவிற்கு முக்கிய சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக மும்பை விமான நிலையத்தில் வைத்து அதிபர் ரில்வின் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையே பெரும்பாலான அம்சங்கள் ஒத்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா-இஸ்ரேல் இடையே 25 ஆண்டுகால நட்புள்ளது என்றும், இந்தச் சுற்றுப்பயணம் இரு நாட்டு மக்களுக்கிடையேயான உறவு எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதற்கு அடையாளம் என்றும் அவர் தெரிவித்தார்.