3 இந்திய ஐஐடி மாணவர்களைக் கைது செய்து இத்தாலி அடாவடி!
டெல்லி: பிரான்சுக்கு கல்விப் பயிற்சிக்காக சென்றிருந்த 3 ஐஐடி மாணவர்கள், இத்தாலிக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். அங்கு அவர்களை இத்தாலி போலீஸார் கைது செய்து அடாவடி செய்துள்ளனர். இந்தியாவின் கடும் எதிர்ப்பையடுத்து மூன்று பேரும் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களை இந்தியத் தூதரகம் பத்திரமாக பிரான்சுக்கு அனுப்பி வைத்தது.
வியாழக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. பிரான்ஸ் - இத்தாலி எல்லையில் உள்ள வென்டிமிகிலா என்ற நகரில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை பாரி என்ற இடத்திற்கு அனுப்பி வைத்தனர். அதற்குள் இந்தியத் தூதரகத்திற்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இந்தியத் தூதரகம் விரைந்து செயல்பட்டு மூன்று பேரையும் மீட்டு பிரான்சுக்கு அனுப்பி வைத்தது.

மூவரில் அக்சித் கோயல், தீபக் பட் ஆகியோர் டெல்லி ஐஐடியில் படிப்பவர்கள். உதய் குசுபதி பாம்பே ஐஐடியைச் சேர்ந்தவர். இவர்கள் பிரான்சுக்கு கல்வி பயிற்சிக்காக சென்றிருந்தனர். அங்கிருந்து இத்தாலிக்கு சுற்றுலா சென்றனர். உரிய விசாக்களையும் வைத்திருந்தனர். இந்த நிலையில் வென்டிமிகிலா ரயில் நிலையத்தில் வைத்து இவர்களை இத்தாலி போலீஸார் திடீரென கைது செய்தனர். மேலும் பலரையும் கைது செய்தனர். அனைவரிடமும் விசா இல்லை என்று கூறி கைது செய்துள்ளனர். ஆனால் அனைவருமே முறையான விசா வைத்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த விவரம் ரோம் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குத் தெரிய வந்தது. இதையடுத்து இத்தாலி நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரிக்கை விடுத்தது. இதையடுத்து இத்தாலி அரசு இதில் தலையிட்டது. விசாரணையில் இத்தாலி போலீஸாரின் நடவடிக்கையில் தவறு இருப்பது தெரிய வந்தது. அதை அவர்களும் ஒத்துக் கொண்டு மூன்று பேரையும் விடுவித்தனர்.
அதன் பின்னர் மூன்று மாணவர்களையும் இந்தியத் தூரகமே பிரான்சுக்கு அனுப்பி வைத்தது. நைஸ் நகருக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications