இந்தியா வந்தார் இவாங்கா டிரம்ப்... பிரதமரை இன்று சந்திக்கிறார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் இந்தியா வந்துள்ளார்.
Recommended Video
ஹைதராபாத்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் இந்தியா வந்துள்ளார். இவாங்கா டிரம்ப், டொனால்ட் டிரம்பிற்கு முதன்மை ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.
அவர் ஹைதராபாத்தில் தற்போது நடந்து வரும் சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதேபோல் பிரதமர் மோடியையும் அவர் இன்று சந்திப்பார்.
ஹைதாராபாத்தில் நடக்கும் இந்த மாநாடு பெரிய அளவில் திட்டமிடப்பட்டு இருக்கிறது. பல முக்கிய தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
ஹைதராபாத்தில் நடக்கும் மாநாடு
ஹைதராபாத்தில் தற்போது சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு நடந்து வருகிறது. இன்று தொடங்கியுள்ள இந்த மாநாடு நவம்பர் 30ம் தேதி வரை நடைபெறும். இதில் உலகின் முக்கிய தொழில் அதிபர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் 150க்கும் அதிகமான நாடுகளில் இருந்து தொழில் முனைவோர்கள் இதில் கலந்து கொள்வார்கள். தினமும் 6000க்கும் அதிகமான நபர்கள் இதில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.
|
இந்தியாவில் இவாங்கா டிரம்ப்
தற்போது இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இவாங்கா டிரம்ப் இந்தியா வந்துள்ளார். இன்று காலை அவர் ஹைதராபாத்தில் விழா நடக்கும் இடத்தை அடைந்தார். முதல்முறையாக தெற்காசியாவில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இவாங்கா டிரம்ப் ஏற்கனவே இந்தியா வந்துள்ளார். ஆனாலும் அமெரிக்க அதிபரின் மகளாக அவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை.
இவாங்கா டிரம்ப் வருகை ஏன்
இந்த நிலையில் இந்த மாநாட்டிற்கு இவாங்கா டிரம்ப் அழைக்கப்பட்டதற்கான காரணமும் கூறப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாநாடு தொழில் முனைவோர்களுக்கானது என்றாலும் பெண் தொழில் முனைவோர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது. இதன் காரணமாகவே இவாங்கா டிரம்ப் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளார். இதில் 1500க்கும் அதிகமான பெண் தொழில் முனைவோர்கள் தினமும் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.
மோடியுடன் சந்திப்பு
இவாங்கா டிரம்ப் இன்று பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார். இந்த மாநாட்டில் தலைமை உரையாற்றி மோடி பேச உள்ளார். அதன்பின் இவாங்கா டிரம்ப் தொழில் முனைவோர்கள் குறித்து உரையாற்றுவார். மேலும் இவர்கள் மற்ற விருந்தினர்களுடன் சேர்ந்து ஒன்றாக மதிய உணவு சாப்பிட உள்ளனர்.