ஜம்மு காஷ்மீர் வெள்ளம்... பாதிக்கப்பட்டவர்களை மீட்க உதவும் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப்!
ஜம்மு: வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு - காஷ்மீரில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் சமூகவலைதளங்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளது.
இணையம் உள்ளிட்ட நவீன தகவல் தொடர்பு சாதனங்களால் தீமைகள் ஒரு புறம் இருந்தாலும், அவ்வப்போது அவற்றின் பணி முக்கியமானதாகவே உள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட கட்சிகள் வாக்காளர்களைத் தொடர்பு கொள்ள இணையத்தை முக்கியக் கருவியாகப் பயன்படுத்தின.
அந்தவகையில், காஷ்மீர் வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்கள் மற்றும் பாதிக்கப் பட்டோரின் உறவினர்கள் இணையம் வாயிலாக தங்களுக்கு தேவையான உதவிகளை எளிதாக மீட்புப் படையினரிடமிருந்து பெற்று வருகின்றனராம்.
சமூக வலைத்தளங்கள்...
ஜம்மு-காஷ்மீர் வெள்ள மீட்பு பணியில் உள்ள இந்திய ராணுவம் சமூக வலைத்தளங்களான டுவிட்டர், பேஸ்புக், மற்றும் வாட்ஸ் ஆப்-ஐ பயன்படுத்தி வருகிறது. அவற்றின் வாயிலாக பெறப்படும் தகவல்கள் மூலம் மீட்புப்பணி நடத்தப்பட்டு வருகிறது.
வீரர்களுக்குத் தகவல்...
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் தங்களுக்கு அனுப்பும் தகவல்களை சம்பந்தப்பட்ட பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவக் குழுக்களின் சீனியர் கமாண்டர்களுக்கு பார்வேர்டு செய்யப்படுகிறது.
ஹெலிகாப்டர் மூலம்...
பின்னர், அதில் கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்து விரைந்து ஹெலிகாப்டர் மூலம் வீரர்கள் மீட்கின்றனர். இதற்கென்றே ஸ்ரீநகரில் 15 ராணுவ குழுக்களும், நாக்ரோதாவில் 16 குழுக்களும் நிறுத்தப்பட்டுள்ளது.
450 வாட்ஸ் அப் தகவல்கள்...
ஜம்முவை சேர்ந்த எம்.எல்.ஏ ரபீக் அஹமது என்பவர் வாட்ஸ் ஆப் மூலமாக காப்பாற்றப்பட்டவர்களில் ஒருவர் ஆவார். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 450க்கும் அதிகமான தகவல்கள் வாட்ஸ் அப் மூலமாக ராணுவத்திற்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கண்ட்ரோல் ரூம் எண்...
இதுவரை 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் யாராவது வெள்ளத்தில் சிக்கியிருந்தால் கன்ட்ரோல் ரூம் எண்ணான 011-26107953, அல்லது 09711077372 என்ற மொபைல் எண்ணுக்கு தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவியும் பாராட்டுகள்...
உதவி கேட்டுமட்டுமின்றி பலர் இந்திய ராணுவத்தைப் பாராட்டியும் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பி வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளை சர்வதேச அளவில் பெறவும் மக்கள் சமூகவலைதளங்களைக் கருவிகளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இன்ன பிற உதவிகள்...
இதேபோல 'Volunteers for flood victims in J&K' என்ற இணையதள ஃபோரமும் கூட திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட பிற உதவிகள் பெறப்பட்டு வருகின்றனவாம்.