உலக கோப்பையில் பாக். வெற்றியை.. பட்டாசு வெடித்து கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள்.. பாய்ந்தது உபா சட்டம்
ஸ்ரீநகர்: உலகக் கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள் மீது உபா சட்டத்தின் கீழ் போலீசார் 2 வழக்குகளைப் பதிவு செய்துள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது ஐக்கிய அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை முதல் சூப்பர் 12 போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்தியா vs பாகிஸ்தான்
பொதுவாகவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகளில் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழந்து 151 ரன்களை எடுத்தது. அதன் பிறகு பேட் செய்த பாகிஸ்தான், அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. அந்த அணியின் ஓப்பனிங் பாட்னர்ஷிப்பை உடைக்க இந்தியா அனைத்து முயற்சிகளையும் எடுத்தது. இருப்பினும், அது கடைசி வரை பலன் அளிக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்கள் முகமது ரிஸ்வான் 79 ரன்களுடனும் பாபார் அசாம் 68 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

வைரல் வீடியோ
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைப் பாகிஸ்தான் தோற்கடிப்பது இதுவே முதல்முறையாகும். இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஷேர் காஷ்மீர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் விடுதிகளில் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடும் வகையில், சில மாணவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்புவதைப் போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இது தொடர்பாக மாணவர்கள் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (உபா) 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உண்மையை கண்டறியும் குழு
உள் துறை அமைச்சர் கடந்த 2019ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல்முறையாகக் காஷ்மீருக்கு 3 நாள் சுற்றுப் பயணமாகச் சென்றிருந்தார். அந்தச் சமயத்தில் பாகிஸ்தான் வெற்றியைக் காஷ்மீர் மாணவர்கள் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக உண்மையைக் கண்டறியும் குழுவை ஷேர் காஷ்மீர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் நிர்வாகம் அமைத்துள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் இதுபோன்ற கொண்டாட்டங்களும் எதுவும் நடைபெறவில்லை என்றும் இருப்பினும், இந்த வீடியோக்கள் குறித்து விசாரணை செய்து வருவதாக அந்த குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாய்ந்தது உபா சட்டம்
மாணவர்களின் கொண்டாட்டங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடும் நபர்களைப் பாகிஸ்தானுக்கே நாம் அனுப்ப வேண்டும் என்றும் அவர்களுக்கு வரும் காலத்தில் அரசு வேலை அளிக்கக் கூடாது என்றும் பலரும் பதிவிட்டு வருகின்றனர். மேலும், இது தொடர்பாகக் கரண் நகர் மற்றும் சௌரா ஆகிய இரண்டு காவல் நிலையங்களில் மாணவர்கள் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், அவற்றில் எந்தவொரு மாணவரின் பெயர்களும் குறிப்பிடப்படவில்லை.
Recommended Video

மாணவர்கள் குற்றச்சாட்டு
அதேநேரம் தாங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு இடையேயான போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மாணவர்களின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்றும் காஷ்மீர் மாநாட்டுக் கட்சித் தலைவர்களில் ஒருவரான சஜாத் லோன் வலியுறுத்தியுள்ளார்.

கடும் நடவடிக்கை கூடாது
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் வேறொரு அணிக்கு ஆதரவு தெரிவித்ததால் அவர்களுக்குத் தேசபக்தி இல்லை என்று நீங்கள் நினைத்தால் - அவர்களுக்குத் தேசபக்தியை ஊட்டும் நடவடிக்கைகளை நீங்கள் தான் எடுக்க வேண்டும். தண்டனை நடவடிக்கைகள் இதற்கு உதவாது" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் மீதான பயங்கரவாத குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறுமாறு லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவுக்கு ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.












Click it and Unblock the Notifications