ஜனாதிபதி ஆட்சியும்.. முப்தி முகம்மது சயீதும்.. ஒரு ஆச்சரிய வரலாறு!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உடனடியாக ஆட்சியமைக்க மெகபூபா முப்தி மறுத்து விட்டதால் அங்கு தற்காலிகமாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு சுதந்திரமடைந்த பின்னர் அங்கு அமலாகும் 7வது குடியரசுத் தலைவர் ஆட்சி இதுவாகும்.
என்ன விசேஷம் என்றால், அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முப்தி முகம்மது சயீத்தான் காரணமாக இருந்திருக்கிறார் என்பதே.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகம்மது சயீத் சமீபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து அவரது மகள் மெகபூபா முப்தி முதல்வர் பொறுப்பை ஏற்பார் என கருதப்பட்டது. ஆனால் உடனடியாக முதல்வர் பொறுப்பில் அமர மெகபூபா மறுத்து விட்டார்.
நள்ளிரவு முதல்
இதையடுத்து மாநில ஆளுநர் என் என் வோரா, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தார். அதை ஏற்று தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்துள்ளது.
நான்கு நாள் துக்கம்
ஜம்மு காஷ்மீரில் முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வந்த பாஜக, நான்கு நாள் துக்கம் முடிந்த பின்னர் நாளை ஆட்சியமைப்பது தொடர்பான முடிவை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. அதேசமயம், இரு கட்சிகளுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என்று மக்கள் ஜனநாயகக் கட்சியும், பாஜகவும் விளக்கியுள்ளன.
7வது முறையாக
1947ம் ஆண்டுக்குப் பிறகு 7வது முறையாக ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.
7 முறையும் முப்தியே காரணம்
இந்த 7 முறையும் முப்தி முகம்மதுதான் ஜனாதிபதி ஆட்சி அமலாக காரணம் என்றால் நம்ப முடிகிறதா.. ஆனால் அதுதான் உண்மை. இந்த ஏழு முறையும் முப்தியே இங்கு ஜனாதிபதி ஆட்சி அமையக் காரணமாக இருந்துள்ளார்.
முதல் முறையாக
1977ம் ஆண்டு முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது. 1977ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி முதல் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.
சயீத் ஆதரவை வாபஸ் பெற்றதால்
அப்போது மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் முப்தி முகம்மது சயீத். அவர், அப்போதைய தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஷேக் முகம்மது அப்துல்லா தலைமையிலான அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால் ஆட்சி கவிழ்ந்தது. குடியரசுத் தலைவர் ஆட்சி வந்தது.
105 நாட்கள்
முதலாவது குடியரசுத் தலைர் ஆட்சி 105 நாட்களுக்கு நீடித்தது. பின்னர் மீண்டும் நடந்த சட்டசபைத் தேர்தலில் அட்டகாசமான பெரும்பான்மையுடன் தேசிய மாநாட்டுக் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
1986ல் 2வது முறை
1986ம் ஆண்டு மீண்டும் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. அப்போதும் காங்கிரஸ் கட்சியால்தான் ஆட்சி கவிழ்ந்தது. அப்போது தலைவராக இருந்தவரும் சயீத்தான். குலாம் முகம்மது ஷா தலைமையிலான அரசை அப்போது கவிழ்த்தார் சயீத். குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. தனது மைத்துனர் பரூக் அப்துல்லாவை கவிழ்த்து விட்டு ஆட்சியமைத்தவர் குலாம் முகம்மது ஷா என்பது குறிப்பிடத்தக்கது.
246 நாட்கள்
2வது குடியரசுத் தலைவர் ஆட்சி 246 நாட்கள் நீடித்தது. அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தியுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு மீண்டும் பரூக் அப்துல்லா ஆட்சியமைத்தார்.
1990ல் 3வது முறை
1990ம் ஆண்டு மூன்றாவது முறையாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. அப்போது பரூக் அப்துல்லா ராஜினாமா செய்ததால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. அப்போது குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் பொறுப்பில், அதாவது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் முப்தி முகம்மது சயீத்.
இதேபோல மற்ற சமயத்திலும் கூட சயீத்தான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அங்கு குடியரசுத் தலைவர் ஆக காரணமாக இருந்துள்ளார். இப்போது அவரது மறைவால் அங்கு ஜனாதிபதி ஆட்சி வந்துள்ளது.