ஓயாத வன்முறை... ஒடுக்க முடியாத மாநில அரசு... காஷ்மீரில் அமலாகிறது ஜனாதிபதி ஆட்சி?
டெல்லி: காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து கலவரம் நடந்து வருவதை கட்டுப்படுத்த மத்திய அரசு சில மாற்றங்களை மேற்கொள்ளப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது. அங்கு புதிய கவர்னரை நியமிக்கலாம் அல்லது கவர்னர் ஆட்சியை கொண்டு வரலாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீர் கலவரத்தைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அம்மாநில அரசை நிர்பந்தம் செய்து வருகிறது. அவ்வாறு செய்யவில்லை என்றால் காஷ்மீரில் சில மாற்றங்களை செய்யவிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இம்மாதம் முடிவதற்குள் ஆளும் மெகபூபா அரசு கலவரத்தைக் கட்டுப்படுத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கெடுவிதித்துள்ளது.

காஷ்மீரில் தொடரும் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக காஷ்மீர் சென்றிருந்த போது, போராட்டங்களை கட்டுப்படுத்த மாநில அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியிருந்தார்.
எனினும், அமைதியை கொண்டு வர காஷ்மீரில் கவர்னர் ஆட்சியை கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகவும், அதற்கான பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரில் நிலவி வரும் இதுபோன்ற சூழ்நிலைகளில் மாநில அரசு சாமர்த்தியமாக செயல்பட வேண்டும். அப்படி செயல்படவில்லை என்றால் மத்திய அரசு தலையிட்டு சில மாற்றங்களை கொண்டு வருவது அவசியம் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த கலவரத்தில் பாகிஸ்தானின் பங்கு இருக்கிறது என்றாலும், காஷ்மீரில் அமைதியை கொண்டு வர மத்திய அரசு மாற்றங்களை செய்தாக வேண்டும் என்று மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications