ஆந்திரா மாநில சட்டசபைத் தேர்தல்: அமித்ஷாவும் ஜே.பி.நட்டாவும் பக்கா வியூகம்.. இன்று பொதுக் கூட்டம்
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக பாஜக தேசிய தலைவர் நட்டாவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இன்று ஆந்திராவுக்கு பயணம் மேற்கொள்கிறார்கள்.
வட இந்தியாவில் வலுவாக இருக்கும் போதிலும் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா ஆகிய தென் இந்தியாவில் பாஜகவால் காலூன்ற முடியவில்லை. கர்நாடகாவில் கூட கடந்த தேர்தலில் தகிடுதத்தம் செய்தே எடியூரப்பா தலைமையிலான ஆட்சி அமைந்தது. அதன்பிறகு பசவராஜ் பொம்மை ஆட்சி செய்தார்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக கர்நாடகத்தில் தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க சில உத்திகளை கையாண்டது. ஆனாலும் அது வொர்க் அவுட் ஆகவில்லை. காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்று ஆட்சி அமைத்துள்ளது.
அது போல் மற்ற தென் மாநிலங்களை கூட தொட்டு பார்க்க முடியாத நிலையே பாஜகவுக்கு உள்ளது. இந்த நிலையில் ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்- தெலுங்கு தேசம் கட்சியிடையேதான் போட்டியே தவிர தேசிய கட்சிகள் ரேஸிலேயே இல்லை என சொல்லலாம்.
வரும் தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள ஜெகன்மேகன் ரெட்டி முனைப்புடன் இருக்கிறார. அது போல் ஆட்சியை பிடிக்க சந்திரபாபு நாயுடுவும் போராடி வருகிறார். இதற்காக சந்திரபாபு நாயுடு தற்போதே பிரசாரத்தை தொடங்கிவிட்டார். அத்துடன் ஏற்கெனவே முறிந்த பாஜகவுடனான கூட்டணியை மீண்டும் புத்துயிர் பெற செய்வார் என தெரிகிறது.
இந்த நிலையில் அமித்ஷா விசாகப்பட்டினம் பொதுக் கூட்டத்தில் இன்று பேசுகிறார். இந்த பொதுக் கூட்டத்தை முடித்துவிட்டு இரவு சென்னை திரும்புகிறார். அது போல் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவும் இன்று திருப்பதியில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அவர் திருப்பதி ஏழுமலையானையும் தரிசனம் செய்கிறார்.