உங்க வேலையை மட்டும் பாருங்க, நாரதர் வேலை பார்க்காதீங்க.. ஜேட்லிக்கு காங். "கொட்டு"!
டெல்லி: நாரதர் வேலையை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நிறுத்த வேண்டும். அதற்குப் பதில் நிதியமைச்சராக பொறுப்பாக நடக்க முயற்சிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கொட்டு வைத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் அமளி நிலவுவதற்கும், முட்டுக்கட்டை விழுவதற்கும் காங்கிரஸ் கட்சி எம்.பிக்களை விட காங்கிரஸ் கட்சியின் தலைமையே காரணம் என்று ஜேட்லி கூறியிருந்ததற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியளர்களிடம் அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்கும், அதன் தலைமைக்கும் எதிராக துவேஷப் போக்குடன் செயல்பட்டு வருகிறார் ஜேட்லி. இதனால் தலைமைக்கும், கட்சியினருக்கும் இடையே சிண்டு முடியப் பார்க்கிறார். இப்படி நாரதர் வேலை பார்ப்பதற்குப் பதில் அவர் நிதியமைச்சராக பொறுப்பாக செயல்பட முயற்சிக்க வேண்டும்.
தற்போது நாட்டின் பொருளாதார நிலை ஜேட்லியின் கட்டுப்பாட்டிலேயே இல்லை. அவர் முழுமையாக லகானை இழந்து விட்டு நிற்கிறார். பொருளாதாரத்தை சரி செய்யத் தெரியவில்லை.
நிதியமைச்சராக செயல்படாமல், கலகம் விளைவிக்கும் வேலையில் இறங்க முயற்சிக்கிறார் ஜேட்லி. இதை அவர் நிறுத்த வேண்டும்.
ஜேட்லி சொல்வது போல காங்கிரஸ் தலைமைக்கும், எம்.பிக்களுக்கும் இடையே எந்த மோதல் போக்கும் இல்லை கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் இருவரும் வேறு வேறு என்பது போல காட்ட முயற்சித்து தன்னைத் தானே தரம் தாழ்த்திக் கொள்கிறார் ஜேட்லி.
கட்சியில் அவர் மீதான நம்பகத்தன்மை குறைந்து போய் விட்டது. அதிலிருந்து மீண்டு வர தன்னை நிலை நிறுத்தப் போராடிக் கொண்டிருக்கிறார் ஜேட்லி. டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்க ஊழலிலிருந்து வெளிவரத் தவிக்கிறார்.
இப்படிப்பட்டவரின் கையில் சிக்கி இந்தியப் பொருளாதாரம் படுவேகமாக சரிந்து வருகிறது. இவருக்கும், பிரதமருக்கும் இடையே சரியான ஒருங்கிணைப்பு இருப்பது போலவெ தெரியவில்லை என்றார் ரமேஷ்.