ஜல்லிக்கட்டு அனுமதியை எதிர்க்கும் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணை
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.
டெல்லி: ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் நடைபெற உள்ளது.
ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளில் காளைகளை அனுமதிக்கும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த ஜனவரி 7-ந் தேதியி அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிக்கையை எதிர்த்து இந்திய விலங்குகள் நல வாரியம், பீட்டா என்ற பிராணிகள் நல அமைப்பு ஆகியவை உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன.
இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசின் அறிவிக்கைக்கு தடை விதித்தது. இதனால் இந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.
இதனிடையே இந்திய விலங்குகள் நல வாரியத் தலைவர் ஆர்.எம்.கார்ப், துணைத் தலைவர் சின்னி கிருஷ்ணா ஆகியோர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. இதை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழக அரசும் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்குகளில் மத்திய அரசு கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு டர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையும் இன்று பிற்பகல் உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.