2024-ல் இந்தியாவில் புல்லட் ரயில் இயக்கம்.. பயணக் கட்டணம் ரூ.2,800
டெல்லி : 2017-ம் ஆண்டு இந்தியாவில் புல்லட் ரயில் திட்டப் பணிகள் துவங்கப்படும் என்றும், 2023-ம் ஆண்டுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு 2024-ல் புல்லட் ரெயில் இயக்கப்படும் எனவும், மத்திய ரயில்வேத் துறை கூறியுள்ளது.
இந்த திட்டத்திற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை அடுத்த மாதம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் இயக்குவது பிரதமர் மோடியின் கனவுத் திட்டமாகும். ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் உருவாகியிருக்கும் இந்த திட்டத்தில் தற்போது 505 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதையில் முழுவீச்சில் ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பாதையில் மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் புல்லட் ரயில்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் அறிக்கை வந்த பிறகு புல்லட் ரயில் திட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என ஏற்கனவே மத்திய ரயில்வே மந்திரி சுரேஷ் பிரபு கூறியிருந்தார்.
இந்நிலையில், இதற்கான இறுதிக்கட்ட ஆய்வறிக்கையை ஜப்பான் ஏஜென்ஸி இந்திய ரயில்வேயிடம் அளித்துள்ளது. அதில், தற்போது மும்பையில் இருந்து அகமதாபாத்திற்கு செல்ல ஏழு மணி நேரம் ஆகும் நிலையில், புல்லட் ரயில் இயக்கப்பட்டால் 2 மணிநேரத்தில் சென்றுவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017-ம் ஆண்டு இந்த திட்டத்திற்கான பணிகள் துவங்கப்பட்டால் 2023-ம் ஆண்டுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு 2024-ல் புல்லட் ரயில் இயக்கப்படும். இந்த திட்டத்திற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை அடுத்த மாதம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், புல்லட் ரெயிலில் ஒரு வழிப்பாதையாக பயணிக்க ரூ.2,800 கட்டணமாக வசூலிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது இதே பாதையில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.சி. முதல் வகுப்பில் பயணி்க்க ஆகும் கட்டணத்தை விட ஒன்றரை மடங்கு அதிகமாகும்.