பவானிசிங்கை நீக்க கோரிய அன்பழகன் மனுவை விசாரிக்க மறுத்த ஹைகோர்ட்: சிறப்பு அமர்வே விசாரிக்கும்
பெங்களூரு: அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீடு மனு மீதான விசாரணையில் அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங்கை நீக்கிவிட்டு புதிய வக்கீல் நியமனம் செய்யக் கோரி தி.மு.க. பொது செயலாளர் க.அன்பழகன் சார்பில் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை சிறப்பு அமர்வே விசாரிக்க வேண்டும் என்று ஹைகோர்ட் கூறிவிட்டது.
தி.மு.க பொதுசெயலாளர் க.அன்பழகன் சார்பில் வக்கீல்கள் கடந்த வாரம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், கடந்த 1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சம் சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 2004ம் ஆண்டு முதல் பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ள தனி நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கடந்தாண்டு செப்டம்பர் 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் ஜெயலலிதா உள்பட நான்கு பேரும் குற்றவாளிகளாக தீர்மானிக்கப்பட்டனர். தனிநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக பவானிசிங் ஆஜராகி வருகிறார்.
அவர் முழுக்க முழுக்க அரசுக்கு ஆதரவாக செயல்படாமல், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். மேலும் மேல்முறையீடு மனு மீதான விசாரணையில் அவர் ஆஜராகி வாதம் செய்ய கர்நாடக அரசு இன்னும் அதிகாரபூர்வமாக நியமன உத்தரவு பிறப்பிக்கவில்லை. ஆகவே அவரை நீக்கிவிட்டு, புதிய வக்கீலை நியமனம் செய்யவேண்டும் என்று கூறியிருந்தனர்.
அந்த மனு கடந்த 8ம் தேதி நீதிபதி அப்துல் நசீர் முன் விசாரணைக்கு வந்தது. க.அன்பகழகன் சார்பில் மூத்த வக்கீல் சி.வி.நாகேஷ் ஆஜராகி வாதம் செய்தபோது தனது தரப்பு நியாயத்தை எடுத்து வைத்தார். அதை தொடர்ந்து மனுவை விசாரணைக்கு ஏற்றுகொண்ட நீதிபதி, வழக்கை ஜனவரி 14ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார்.
அதன்படி, அம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால், ஏற்கனவே ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு ஹைகோர்ட்டின் சிறப்பு அமர்வு நீதிபதி குமாரசாமி முன்னிலையில் விசாரிக்கப்பட்டுவருவதால், இந்த மனுவையும் அவரே விசாரிப்பது சரியாக இருக்கும் என்று நீதிபதி அப்துல் நசீர் தெரிவித்துவிட்டார். எனவே குமாரசாமி முன்பு இந்த மனு விசாரணைக்கு வர உள்ளது.
ஏற்கனவே, அன்பழகன், இவ்வழக்கில் தலையிடுவதாக கடிந்து கொண்டவர் நீதிபதி குமாரசாமி. அவர் முன்பே இந்த மனுவும் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.