ஜெ. மேல்முறையீட்டு வழக்கில் மே 12ம் தேதி தீர்ப்பு: பி.வி. ஆச்சார்யா
பெங்களூர்: ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் வரும் மே மாதம் 12ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ஜெயலலிதா ஜாமீனில் வெளியே வந்தார். அவர் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை தமிழக அரசு நியமித்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை தெரிவித்தது. இதையடுத்து கர்நாடக அரசு பி.வி. ஆச்சார்யாவை அரசு வழக்கறிஞராக நியமித்தது. ஏற்கனவே ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த ஆச்சாரியா ஜெயலலிதா தரப்பின் நெருக்கடியால் பதவி விலகினார்.
இந்நிலையில் தற்போது மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள ஆச்சார்யா நீதிமன்றத்தில் 18 பக்கங்கள் கொண்ட வாதத்தை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து ஆச்சார்யா கூறுகையில்,
ஜெயலலிதா வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வமான வாதத்தை ஒரு நாளில் சமர்பிக்க வேண்டும் என்பதால் அந்த வழக்கு பற்றி நன்கு அறிந்த என்னை அரசு வழக்கறிஞராக நியமித்துள்ளனர். நான் அளித்துள்ள எழுத்துப்பூர்வமான வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்கும். இந்த வழக்கில் வரும் மே மாதம் 12ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications