ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: அப்பீல் மனு நாளை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வருகிறது.
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிமன்றம் நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடியும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ. 10 கோடியும் அபராதம் விதித்தும் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா உத்தரவிட்டார்.

இதையடுத்து நான்கு பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் நான்கு பேரும் தங்களுக்கு விதிக்ப்பட்ட தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 29ம் தேதி மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். கூடவே ஜாமீன் கோரியும் மனு செய்தனர்.
இந்த மனுக்களை உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரா விசாரித்தார். பின்னர் ஜாமீன் கோரிக்கை மற்றும் தண்டனையை நிறுத்தி வைக்க கோரிக்கை ஆகியவற்றை நிராகரித்து அவர் உத்தரவிட்டார். மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை அக்டோபர் 27ம் தேதி விசாரிக்கப்படும் என்றும் அவர் உத்தரவிட்டிருந்தார்.
அதன் படி நாளை இந்த மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன.












Click it and Unblock the Notifications